துதிபாடுவது எத்தனை நன்று
147 1 அல்லேலூயா! எங்கள் பிதாவைத் துதித்துப் பாடுவது எத்தனை நன்று; அவரைத் துதிப்பது எத்தனை இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
2 எங்கள் பிதா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களைச் சேர்த்துக்கொள்ளுகிறார். 3 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களைக் குணமாக்குகிறார் அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4 அவர் நட்சத்திரங்களை எண்ணுகிறார்; அவைகள் ஒவ்வொன்றையும் பேர்சொல்லி அழைக்கிறார். 5 எங்கள் ஆண்டவராகிய பிதா மகத்துவமுள்ளவர், வல்லமையில் பராக்கிரமமுள்ளவர்; அவருடைய அறிவு அளவிடற்கரியது. 6 எங்கள் பிதா தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தள்ளிப்போடுகிறார்.
7 எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரத்தோடே பாடுங்கள்; சுரமண்டலத்தினால் அவருக்கு இசை எழுப்புங்கள். 8 அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்; பூமிக்கு மழையை அனுப்புகிறார்; மலைகளில் புல்லை முளைக்கப்பண்ணுகிறார். 9 அவர் மிருகங்களுக்கு அவைகளின் ஆகாரத்தைக் கொடுக்கிறார், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் கொடுக்கிறார். 10 குதிரையின் பலத்தில் அவருக்குப் பிரியமில்லை, மனிதனுடைய கால்களில் அவருக்கு விருப்பமுமில்லை. 11 எங்கள் பிதாவின் இருதயம் தமக்குப் பயந்து நடக்கிறவர்களிடத்திலும், அவருடைய உடன்படிக்கை அன்பின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்களிடத்திலும் பிரியப்படுகிறது.
12 எருசலேமே, எங்கள் பிதாவைத் துதி! சீயோனே, உன் பிதாவைத் துதி! 13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களை உறுதிப்படுத்துகிறார்; உன் மதில்களுக்குள் உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14 அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைத் தருகிறார்; உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 15 அவர் தமது கட்டளையைப் பூமிக்கு அனுப்புகிறார்; அவருடைய வார்த்தை மிக வேகமாய் ஓடுகிறது. 16 அவர் ஆட்டுமயிரைப்போல உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைபனியைத் தூவுகிறார். 17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளைப்போல எறிகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? 18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, உறைந்ததை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசப்பண்ணுகிறார், அப்பொழுது தண்ணீர்கள் ஓடுகின்றன. 19 அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கு அறிவிக்கிறார், தமது பிரமாணங்களையும் நியாயங்களையும் இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறார். 20 வேறொரு ஜாதிக்கும் அவர் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நியாயங்களை அவர்கள் அறியார்கள். அல்லேலூயா!