வன்முறையாளரிடமிருந்து என்னைக் காத்தருளும்
இராகத் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
140 1 என் பிதாவே, தீயவர்களிடமிருந்து என்னை விடுவியும்; வன்முறையாளரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும், 2 அவர்கள் தங்கள் இருதயங்களில் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், நாள்முழுவதும் போர்களை மூட்டிவிடுகிறார்கள். 3 அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பைப்போல் கூர்மையாக்குகிறார்கள்; விரியன் பாம்பின் விஷம் அவர்களுடைய உதடுகளின்கீழ் இருக்கிறது. சேலா
4 என் பிதாவே, துன்மார்க்கரின் கைகளுக்கு என்னைக் காத்தருளும்; வன்முறையாளரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும், அவர்கள் என் அடிகளை இடறச்செய்யத் திட்டமிடுகிறார்கள். 5 அகந்தையுள்ளவர்கள் எனக்குக் கண்ணியை மறைத்துவைத்திருக்கிறார்கள்; வலையின் கயிறுகளை விரித்திருக்கிறார்கள்; பாதையின் ஓரமாய் எனக்குச் சுருக்குகளை வைத்திருக்கிறார்கள். சேலா
6 நான் என் பிதாவை நோக்கி, “நீரே என் பிதா” என்றேன். என் இரக்கத்திற்கான வேண்டுதலின் சத்தத்தைக் கேளும். 7 சர்வவல்லமையுள்ள பிதாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளிலே நீர் என் தலையை மூடிக் காத்தீர். 8 என் பிதாவே, துன்மார்க்கருடைய இச்சைகளை நிறைவேற்றாதேயும்; அவர்களுடைய சூழ்ச்சி வெற்றிபெற விடாதேயும், இல்லையேல் அவர்கள் தலைதூக்குவார்கள். சேலா
9 என்னைச் சூழ்ந்துகொள்கிறவர்களுடைய தலைவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய சொந்த உதடுகளின் தீங்கே அவர்களை மூடிக்கொள்ளட்டும். 10 எரிகிற தழல்கள் விழட்டும்; அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் அக்கினியிலே தள்ளப்படட்டும், சேற்றுப் பள்ளங்களில், இனி ஒருபோதும் எழுந்திராதபடி. 11 அவதூறு பேசுகிறவன் தேசத்தில் நிலைபெறாதிருக்கட்டும்; தீமை வன்முறையாளனை அடிமேல் அடியாக வேட்டையாடட்டும்.
12 எங்கள் பிதா சிறுமைப்பட்டவர்களின் நியாயத்தை ஆதரித்து, எளியவர்களுக்கு நீதி வழங்குவார் என்று அறிவேன். 13 நிச்சயமாய் நீதிமான்கள் உம்முடைய நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உம்முடைய சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.