தாவீதின் சங்கீதம்.
103 1 என் ஆத்துமாவே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரி; என் உள்ளத்திலுள்ள யாவுமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்!
2 என் ஆத்துமாவே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரி; அவருடைய தயவுகள் ஒன்றையும் மறவாதே— 3 அவரே உன் பாவங்கள் யாவையும் மன்னிக்கிறவர், உன் நோய்கள் யாவையும் குணமாக்குகிறவர், 4 உன் ஜீவனைப் பாதாளத்திற்கு விலகி மீட்கிறவர், உறுதியான உடன்படிக்கை அன்பினாலும் இரக்கத்தினாலும் உன்னை முடிசூட்டுகிறவர், 5 நன்மைகளால் உன்னைத் திருப்தியாக்குகிறவர், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம், உன் வாலிபம் கழுகுக்கு ஒப்பாகப் புதிதாகும்படி செய்கிறவர்.
6 எங்கள் பிதா நீதியைச் செய்கிறார், ஒடுக்கப்பட்ட யாவருக்கும் நியாயத்தையும் செய்கிறார்.
7 அவர் தம்முடைய வழிகளை மோசேக்கு அறியப்படுத்தினார், தம்முடைய கிரியைகளை இஸ்ரவேல் மக்களுக்கும் அறியப்படுத்தினார். 8 எங்கள் பிதா இரக்கமும் கிருபையும் உள்ளவர், நீடிய சாந்தமும் மிகுந்த உறுதியான உடன்படிக்கை அன்பும் உள்ளவர். 9 அவர் எப்போதும் வழக்காடமாட்டார், என்றென்றைக்கும் கோபம் வைத்திருக்கவுமாட்டார். 10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நம்மை நடத்தவில்லை, நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குப் பதிலளிக்கவுமில்லை. 11 பூமிக்கு மேலாக வானங்கள் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவ்வளவு பெரிதாயிருக்கிறது அவருக்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் அவருடைய உறுதியான உடன்படிக்கை அன்பு; 12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13 ஒரு தகப்பனுடைய இருதயம் தன் பிள்ளைகள்மேல் இரங்குகிறதுபோல, எங்கள் பிதாவின் இருதயம் அவருக்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் இரங்குகிறது. 14 அவர் நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார்; நாம் மண்ணென்பதை நினைத்திருக்கிறார். 15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் காட்டுப்பூவைப்போல் மலருகிறான்; 16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போகிறது, அது இருந்த இடமும் அதை இனி அறியாது. 17 ஆனாலும் எங்கள் பிதாவின் உறுதியான உடன்படிக்கை அன்போ அநாதிகாலம் முதல் அநாதிகாலம்வரை அவருக்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் நிலைத்திருக்கிறது, அவருடைய நீதி பிள்ளைகளுடைய பிள்ளைகள்வரை நீடிக்கிறது, 18 அவருடைய உடன்படிக்கையைக் காத்து, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைத்திருக்கிறவர்கள்மேல் நிலைத்திருக்கிறது.
19 எங்கள் பிதா தம்முடைய சிங்காசனத்தை வானங்களில் ஸ்தாபித்தார், அவருடைய ராஜ்யம் யாவற்றின்மேலும் ஆளுகை செய்கிறது.
20 அவருடைய வார்த்தையின்படி செய்கிற பலசாலிகளாகிய அவருடைய தூதர்களே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரியுங்கள்; அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படியுங்கள்! 21 அவருடைய சித்தத்தின்படி செய்கிற அவருடைய சேவகராகிய அவருடைய சர்வ சேனைகளே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரியுங்கள்! 22 அவருடைய சகல கிரியைகளே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரியுங்கள், அவருடைய ராஜ்யம் எங்கும் இருக்கிறவைகளே. என் ஆத்துமாவே, எங்கள் பிதாவை ஸ்தோத்திரி!