தேசம் முழுவதற்கும் விரோதமாய்ப் புறப்படும் சாபம்
5 1மறுபடியும் நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, பறந்துகொண்டிருந்த ஒரு புத்தகச்சுருள் எனக்கு முன்பாக இருந்தது. 2அவர் என்னை நோக்கி, “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “பறந்துகொண்டிருக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன்; அது முப்பது அடி நீளமும் பதினைந்து அடி அகலமுமாய் இருக்கிறது” என்றேன்.
3அப்பொழுது அவர் என்னை நோக்கி, “இது தேசம் முழுவதற்கும் விரோதமாய்ப் புறப்படுகிற சாபம்; திருடுகிற ஒவ்வொருவனும் அதின் ஒரு பக்கத்தின்படியே அகற்றப்படுவான்; பொய்யாய் ஆணையிடுகிற ஒவ்வொருவனும் அதின் மறுபக்கத்தின்படியே அகற்றப்படுவான்.
4நான் அதை அனுப்பியிருக்கிறேன் என்று பரலோகச் சேனைகளின் பிதா சொல்லுகிறார்; அது திருடனுடைய வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுகிறவனுடைய வீட்டிலும் பிரவேசித்து, அங்கே தங்கி, மரங்களோடும் கற்களோடும் அந்த வீட்டை நாசம்பண்ணும்” என்றார்.
அக்கிரமம் தன் இடத்திற்குச் சுமந்துகொண்டு போகப்படுதல்
5அப்பொழுது என்னோடே பேசின தூதன் புறப்பட்டு வந்து, என்னை நோக்கி, “இப்போது உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டுப் போகிற இது என்னவென்று பார்” என்றார்.
6“இது என்ன?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “இது புறப்பட்டுப்போகிற மரக்கால்” என்று சொல்லி, பின்பு, “இது தேசம் முழுவதிலுமுள்ள அவர்களுடைய அக்கிரமம்” என்றார்.
7உடனே, ஈயத்தாலான மூடி தூக்கப்பட்டது; இதோ, அந்த மரக்காலுக்குள்ளே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள். 8அப்பொழுது அவர், “இது அக்கிரமம்” என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே திரும்பத் தள்ளி, அதின் வாயின்மேல் ஈயப்பாரத்தை அமுக்கிப்போட்டார்.
9நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு ஸ்திரீகள் தங்கள் செட்டைகளில் காற்றுடன் புறப்பட்டு வந்தார்கள்; அவர்களுடைய செட்டைகள் நாரையின் செட்டைகளுக்கு ஒப்பாயிருந்தன; அவர்கள் அந்த மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே தூக்கிக்கொண்டு போனார்கள். 10அப்பொழுது நான் என்னோடே பேசின தூதனை நோக்கி, “இவர்கள் அந்த மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள்?” என்று கேட்டேன்.
11அதற்கு அவர் என்னை நோக்கி, “அதற்குச் சிநெயார் தேசத்திலே ஒரு வீட்டைக் கட்டும்படிக்கே கொண்டுபோகிறார்கள்; அது ஆயத்தமாகும்போது, அந்த மரக்கால் அங்கே தன் ஆதாரத்தின்மேல் வைக்கப்படும்” என்றார். a a v11 சிநெயார் என்பது பாபிலோனியாவின் பூர்வ நாமம் — இஸ்ரவேலின் மகா சிறையிருப்பின் தேசம்.