ஒரு பாட்டு. ஆசாபின் சங்கீதம்.
83 1 எங்கள் பிதாவே, மவுனமாயிராதேயும்; பேசாமலிராதேயும், சும்மாயிராதேயும், எங்கள் பிதாவே. 2 இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளிக்கிறார்கள்; உம்மைப் பகைக்கிறவர்கள் தலைநிமிர்ந்திருக்கிறார்கள். 3 உம்முடைய ஜனத்திற்கு விரோதமாய் அவர்கள் இரகசியமாய்த் தந்திரம் பண்ணுகிறார்கள்; நீர் அருமையாய் எண்ணுகிறவர்களுக்கு விரோதமாய் ஏகமாய்ச் சதிசெய்கிறார்கள். 4 “வாருங்கள், இவர்களை ஒரு ஜாதியாயிராதபடி அழித்துப்போடுவோம்; இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாதிருக்கக்கடவது” என்கிறார்கள். 5 அவர்கள் ஏகமனதாய் ஆலோசனை பண்ணி, உமக்கு விரோதமாய் உடன்படிக்கை செய்திருக்கிறார்கள்— 6 ஏதோமியரின் கூடாரங்களும் இஸ்மவேலரும், மோவாபியரும் ஆகரியரும், 7 கேபாலும் அம்மோனும் அமலேக்கும், தீருவின் குடிகளோடே பெலிஸ்தியரும் சேர்ந்திருக்கிறார்கள். 8 அசீரியரும் அவர்களோடே சேர்ந்து, லோத்தின் புத்திரருக்குப் பலத்த புயமாயிருக்கிறார்கள். சேலா
9 மீதியானருக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; கீசோன் ஆற்றண்டையில் சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்ததுபோலவே; 10 அவர்கள் எந்தோரில் அழிந்து, நிலத்திற்கு எருவானார்கள். 11 அவர்களுடைய பிரபுக்களை ஓரேபைப்போலவும் சேபைப்போலவும், அவர்களுடைய அதிபதிகள் யாவரையும் சேபாகைப்போலவும் சல்முனாவைப்போலவும் ஆக்கும்; 12 “நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுவோம்” என்று சொன்னவர்கள்— தேவனுடைய மேய்ச்சல் நிலங்களையே. 13 என் பிதாவே, அவர்களைச் சுழல்கிற தூசியைப்போலவும், காற்றுக்கு முன்பாகப் பறக்கிற பதரைப்போலவும் ஆக்கும். 14 காடு அக்கினியால் எரிவதுபோலவும், நெருப்பு மலைகளைச் சுட்டெரிப்பதுபோலவும், 15 அப்படியே உம்முடைய பெருங்காற்றினால் அவர்களைத் துரத்தி, உம்முடைய புசலினால் அவர்களைக் கலங்கப்பண்ணும். 16 அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும்; அப்பொழுது அவர்கள் உம்முடைய நாமத்தைத் தேடுவார்கள், எங்கள் பிதாவே. 17 அவர்கள் என்றென்றைக்கும் வெட்கி கலங்குவார்களாக; இலச்சையடைந்து அழிந்துபோவார்களாக; 18 நீர் ஒருவரே என்றும், எங்கள் பிதா என்னும் நாமமுள்ள நீர் பூமியனைத்தின்மேலும் மகா உன்னதமானவர் என்றும் அவர்கள் அறிந்துகொள்ளும்படி.