இருளில் தாவீதின் கூக்குரல்
இராகத் தலைவனுக்கு; நரம்பு வாத்தியங்களுடன், செமினீத் என்னும் ராகத்தின்படி பாடப்பட்டது. தாவீதின் சங்கீதம்.
6 1 என் பிதாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும் உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். 2 என் பிதாவே, என்மேல் கிருபையாயிரும், நான் பலவீனமாயிருக்கிறேன்; என் பிதாவே, என்னைக் குணமாக்கும், என் எலும்புகள் திகிலால் நடுங்குகிறது.
3 என் ஆத்துமா மிகுந்த திகிலால் நடுங்குகிறது. ஆனால் என் பிதாவே, நீரோ — எதுவரைக்கும்? 4 என் பிதாவே, என்னிடம் திரும்பிவாரும்; என் ஜீவனை விடுவியும். உம்முடைய உடன்படிக்கை அன்பினிமித்தம் என்னை இரட்சியும்.
5 மரணத்திலோ உம்மை நினைவுகூருதல் இல்லையே; பாதாளத்தில் உம்மைத் துதிப்பவர் யார்?
6 என் தவிப்பினால் நான் சோர்ந்துபோனேன். இரவெல்லாம் என் படுக்கையைக் கண்ணீரால் மிதக்கச்செய்து, என் அழுகையால் அதை நனைக்கிறேன்.
7 துக்கத்தினால் என் கண்கள் சோர்ந்துபோயின; என் பகைஞர் அனைவர் நிமித்தமும் அவை மங்கிப்போயின. 8 அக்கிரமம் செய்கிற அனைவரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் பிதா என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 9 என் பிதா என் இரக்க விண்ணப்பத்தைக் கேட்டார்; என் பிதா என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுகிறார். 10 என் சத்துருக்கள் அனைவரும் வெட்கமடைந்து மிகுந்த திகிலால் நடுங்குவார்கள்; அவர்கள் பின்வாங்கி, சடுதியில் வெட்கப்படுவார்கள்.