தரிசனம் இல்லாத இடத்திலே
29 1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் செவிகொடுக்க மறுக்கிறவன் திடீரென முறிக்கப்பட்டு, குணமாக்க முடியாதவனாய்ப் போவான். 2நீதிமான்கள் செழிக்கும்போது ஜனங்கள் மகிழுகிறார்கள், துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் பெருமூச்சு விடுகிறார்கள். 3ஞானத்தை நேசிக்கிற மனிதன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறான், வேசிகளோடு கூடித் திரிகிறவனோ தன் செல்வத்தை அழித்துப்போடுகிறான். 4நியாயத்தினால் ஒரு ராஜா தேசத்திற்கு உறுதியைத் தருகிறான், லஞ்சத்திற்கு ஆசைப்படுகிறவனோ அதை இடித்துப்போடுகிறான். 5தன் அயலானை முகஸ்துதி செய்கிற மனிதன் அவனுடைய பாதங்களுக்கு வலை விரிக்கிறான். 6பொல்லாத மனிதன் தன் சொந்தப் பாவத்தினாலேயே சிக்குண்டுபோகிறான், நீதிமான்களோ பாடி மகிழ்கிறார்கள். 7நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்க கருத்தாயிருக்கிறார்கள், துன்மார்க்கருக்கோ அப்படிப்பட்ட உணர்வே இல்லை. 8பரியாசக்காரர் ஒரு நகரத்தைத் தீ மூட்டி எரியவைக்கிறார்கள், ஞானிகளோ கோபத்தை ஆற்றுகிறார்கள். 9ஞானமுள்ளவன் மூடனோடு வழக்காடச் சென்றால், மூடன் கோபமடைந்து பரியாசம் செய்கிறான், சமாதானமே இராது. 10இரத்தப்பிரியர் குற்றமற்றவனை வெறுத்து, செம்மையானவனைக் கொலைசெய்யத் தேடுகிறார்கள். 11மூடன் தன் கோபத்தையெல்லாம் கொட்டிவிடுகிறான், ஞானமுள்ளவனோ அதை அடக்கி, தன்னை அமைதியாய் வைத்துக்கொள்கிறான். 12ஒரு அதிபதி பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அதிகாரிகள் யாவரும் துன்மார்க்கராவார்கள். 13ஏழையும் ஒடுக்குகிறவனும் ஒரு காரியத்தில் ஒத்திருக்கிறார்கள்: எங்கள் பிதா இருவருடைய கண்களுக்கும் பார்வையைத் தருகிறார். 14ஒரு ராஜா ஏழைகளை நீதியோடு நியாயந்தீர்த்தால், அவனுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைநிற்கும். 15பிரம்பும் கடிந்துகொள்ளும் வார்த்தையும் ஞானத்தைத் தரும், தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. 16துன்மார்க்கர் செழிக்கும்போது அக்கிரமமும் செழிக்கிறது, நீதிமான்களோ அவர்களுடைய வீழ்ச்சியைக் காண்பார்கள். 17உன் மகனைச் சிட்சி; அப்பொழுது அவன் உனக்குச் சமாதானத்தைத் தருவான்; உன் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் கொண்டுவருவான். 18தரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் கட்டுக்கடங்காமல் அலைகிறார்கள், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்கிறவனோ பாக்கியவான். 19வெறும் வார்த்தைகளால் மட்டும் ஒரு வேலைக்காரனைத் திருத்தமுடியாது; அவன் விளங்கிக்கொண்டாலும் கீழ்ப்படியமாட்டான். 20தன் வார்த்தைகளில் அவசரப்படுகிற மனிதனைக் காண்கிறாயா? அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கை உண்டு. 21ஒரு வேலைக்காரனைச் சிறுவயது முதல் செல்லமாக வளர்த்தால், முடிவில் அவன் வாரிசைப்போல் ஆகிவிடுவான். 22கோபக்காரன் வாக்குவாதத்தை எழுப்புகிறான், முன்கோபமுள்ளவனோ அநேக பாவங்களைச் செய்கிறான். 23மனிதனுடைய பெருமை அவனைத் தாழ்த்துகிறது, தாழ்மையுள்ள ஆவியோ கனத்தைப் பெற்றுக்கொள்கிறது. 24திருடனுக்குக் கூட்டாளியாயிருக்கிறவன் தனக்குத்தானே பகைவன்; அவன் சாபத்தைக் கேட்டும் ஒன்றும் சொல்லாதிருக்கிறான். a a v24 ‘சாபம்’ என்பது, குற்றத்தைக் கண்ட எவனும் முன்வந்து சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்தும் பொது ஆணையாகும். 25மனுஷனுக்குப் பயப்படுதல் ஒரு கண்ணியை வைக்கிறது, எங்கள் பிதாவை நம்புகிறவனோ பாதுகாப்பாய் வைக்கப்படுகிறான். 26அநேகர் ஒரு அதிபதியின் தயவைத் தேடுகிறார்கள், ஒரு மனிதனுக்கு நியாயமோ எங்கள் பிதாவிடமிருந்தே வருகிறது. 27அநீதியுள்ள மனிதன் நீதிமான்களுக்கு அருவருப்பாயிருக்கிறான், செம்மையானவனோ துன்மார்க்கருக்கு அருவருப்பாயிருக்கிறான்.