சிங்கத்தைப்போல் தைரியம்
28 1ஒருவரும் துரத்தாதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல் தைரியமாயிருக்கிறார்கள். 2ஒரு தேசம் கலகம் செய்யும்போது, அதற்கு அநேக அதிபதிகள் உண்டாகிறார்கள்; ஆனால் புத்தியும் அறிவும் உள்ள மனிதனால் அது நிலைத்திருக்கும். 3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன், ஆகாரத்தை மீதியாக வைக்காமல் அடித்துக்கொண்டுபோகிற பெருமழையைப்போல் இருக்கிறான். 4நியாயப்பிரமாணத்தைக் கைவிடுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழ்கிறார்கள்; நியாயப்பிரமாணத்தைக் காக்கிறவர்களோ அவர்களுக்கு விரோதமாய்ப் போராடுகிறார்கள். 5தீயவர்கள் நியாயத்தை உணர்ந்துகொள்ளுகிறதில்லை; எங்கள் பிதாவைத் தேடுகிறவர்களோ அதை முழுவதுமாய் உணர்ந்துகொள்ளுகிறார்கள். 6உத்தமமாய் நடக்கிற தரித்திரனே மேன்மையானவன், வழிகளில் மாறுபாடுள்ள ஐசுவரியவானைப் பார்க்கிலும். 7நியாயப்பிரமாணத்தைக் காக்கிறவன் புத்தியுள்ள மகன்; பெருந்தீனிக்காரருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை வெட்கப்படுத்துகிறான். 8வட்டியினாலும் அநியாய லாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவன், ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடுக்கிறவனுக்கே அதைச் சேர்த்துவைக்கிறான். 9நியாயப்பிரமாணத்தைக் கேட்க மறுக்கிறவன், அவனுடைய ஜெபமும் அருவருப்பாயிருக்கும். 10உத்தமர்களைத் தீய வழியில் தப்பி நடக்கப்பண்ணுகிறவன் தானே வெட்டின குழியில் விழுவான்; குற்றமற்றவர்களோ நன்மைகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 11ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவானாயிருக்கிறான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனை ஊடுருவிப் பார்த்துவிடுகிறான். 12நீதிமான்கள் வெற்றி பெறும்போது மிகுந்த மகிமை உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ ஜனங்கள் ஒளித்துக்கொள்கிறார்கள். 13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கையிட்டு அவைகளைவிட்டு விலகுகிறவனோ இரக்கம் பெறுவான். 14எப்பொழுதும் பயபக்தியாயிருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளுகிறவனோ ஆபத்தில் விழுவான். 15கெர்ச்சிக்கிற சிங்கத்துக்கும் பாய்கிற கரடிக்கும் ஒப்பாய், தரித்திர ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்துகிற துன்மார்க்க அதிபதி இருக்கிறான். 16புத்தியில்லாத அதிபதி கொடிய ஒடுக்குகிறவனாயிருக்கிறான்; அநியாய லாபத்தை வெறுக்கிறவனோ தன் நாட்களை நீடிக்கப்பண்ணுவான். 17இரத்தப்பழியின் குற்றத்தால் நெருக்கப்பட்ட மனிதன் மரணமட்டும் தப்பி ஓடுகிறவனாயிருப்பான்; ஒருவரும் அவனுக்கு ஆதரவளிக்காதிருக்கக்கடவர்கள். 18உத்தமமாய் நடக்கிறவன் காக்கப்படுவான்; வழிகளில் மாறுபாடுள்ளவனோ சடுதியில் விழுவான். 19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணான காரியங்களைப் பின்பற்றுகிறவனோ தரித்திரத்தினால் நிறைந்திருப்பான். 20உண்மையுள்ள மனிதன் ஆசீர்வாதங்களால் நிறைவடைவான்; ஐசுவரியவானாகும்படி அவசரப்படுகிறவனோ தண்டனைக்குத் தப்பமாட்டான். 21பட்சபாதம் காட்டுகிறது நல்லதல்ல; ஆனாலும் ஒரு துண்டு அப்பத்துக்காக மனிதன் அநியாயம் செய்வான். 22கண்ணோட்டமில்லாதவன் செல்வத்தை அடையும்படி அவசரப்படுகிறான்; ஆனால் தனக்கு வறுமை வந்துசேரும் என்று அறியாதிருக்கிறான். 23ஒரு மனிதனைக் கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அதிக தயவைப் பெறுவான், நாவினால் இச்சகம் பேசுகிறவனைப் பார்க்கிலும். 24தன் தகப்பனையாவது தன் தாயையாவது கொள்ளையிட்டு, “இது பாவமல்ல” என்று சொல்லுகிறவன், நாசம்பண்ணுகிறவனுக்குத் தோழனாயிருக்கிறான். 25பேராசைக்காரன் சண்டையை எழுப்புகிறான்; எங்கள் பிதாவை நம்புகிறவனோ செழிப்படைவான். 26தன் சொந்த இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானத்தில் நடக்கிறவனோ காக்கப்படுவான். 27ஏழைகளுக்குக் கொடுக்கிறவனுக்கு ஒன்றும் குறைவுபடாது; அவர்களைக் காணாதபடி தன் கண்களை மூடிக்கொள்ளுகிறவனோ அநேக சாபங்களைப் பெறுவான். 28துன்மார்க்கர் எழும்பும்போது ஜனங்கள் ஒளித்துக்கொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.