தாமதப்படும் நம்பிக்கை, நிறைவேறும் ஆசை
13 1ஞானமுள்ள மகன் தன் தகப்பனுடைய போதனையைக் கவனிக்கிறான்; ஆனால் பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலைக் கேளான். 2ஒருவன் தன் வாயின் கனியால் நன்மைகளை அனுபவிக்கிறான்; ஆனால் துரோகிகளின் ஆசையோ கொடுமையின்மேல் இருக்கிறது. 3தன் வாயைக் காக்கிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்; ஆனால் தன் உதடுகளை அகலத் திறக்கிறவனுக்கோ அழிவு வரும். 4சோம்பேறி ஆசைப்பட்டும் ஒன்றும் அடையான்; ஆனால் ஜாக்கிரதையுள்ளவனின் ஆசையோ நிறைவாகத் திருப்தியாகும். 5நீதிமான் பொய்யை வெறுக்கிறான்; ஆனால் துன்மார்க்கனோ இகழ்ச்சியையும் அவமானத்தையும் வருவிக்கிறான். 6வழி குற்றமற்றவனை நீதி காக்கிறது; ஆனால் துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடுகிறது. 7ஒருவன் ஒன்றும் இல்லாதிருந்தும் ஐசுவரியவான்போல் பாசாங்கு பண்ணுகிறான்; மற்றொருவன் மிகுந்த செல்வம் உடையவனாயிருந்தும் தரித்திரன்போல் பாசாங்கு பண்ணுகிறான். 8ஒருவனுடைய செல்வம் அவன் உயிருக்கு மீட்கும்பொருளாகும்; ஆனால் தரித்திரனோ மிரட்டலைக் கேளான். 9நீதிமான்களின் ஒளி மகிழ்ச்சியோடு பிரகாசிக்கும்; ஆனால் துன்மார்க்கரின் விளக்கோ அணைந்துபோகும். 10அகந்தை சண்டையைத் தவிர வேறொன்றையும் உண்டாக்காது; ஆனால் ஆலோசனையைத் தேடுகிறவர்களிடத்தில் ஞானம் இருக்கிறது. 11வஞ்சனையால் சம்பாதிக்கப்பட்ட செல்வம் குறைந்துபோகும்; ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கிறவனோ அதைப் பெருகச்செய்கிறான். 12தாமதப்படும் நம்பிக்கை இருதயத்தை நோகச்செய்கிறது; ஆனால் நிறைவேறின ஆசையோ ஜீவவிருட்சமாயிருக்கிறது. 13வார்த்தையை அசட்டைபண்ணுகிறவன் தனக்கே அழிவை வருவித்துக்கொள்கிறான்; ஆனால் கட்டளைக்குப் பயந்து நடக்கிறவனோ பலனடைவான். 14ஞானமுள்ளவனுடைய போதனை ஜீவஊற்றாயிருக்கிறது; அது ஒருவனை மரணக் கண்ணிகளினின்று விலக்கித் திருப்புகிறது. 15நல்லறிவு தயவைப் பெற்றுத்தரும்; ஆனால் துரோகிகளின் வழியோ அவர்களுக்கு அழிவாகும். 16விவேகியான ஒவ்வொருவனும் அறிவோடு செயல்படுகிறான்; ஆனால் மூடனோ தன் மதியீனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறான். 17துன்மார்க்கமான தூதன் இக்கட்டில் விழுகிறான்; ஆனால் உண்மையுள்ள தூதனோ சுகத்தை வருவிக்கிறான். 18கண்டிப்பை அசட்டைபண்ணுகிறவனுக்குத் தரித்திரமும் இகழ்ச்சியும் வரும்; ஆனால் கடிந்துகொள்ளுதலைக் கவனிக்கிறவனோ கனமடைவான். 19நிறைவேறின ஆசை ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கிறது; ஆனால் தீமையை விட்டு விலகுவதோ மூடருக்கு அருவருப்பாயிருக்கிறது. 20ஞானிகளோடு நடக்கிறவன் ஞானமடைகிறான்; ஆனால் மூடருக்குத் தோழனாயிருக்கிறவனோ கேட்டை அடைகிறான். 21பாவிகளைத் தீங்கு தொடர்ந்துபிடிக்கும்; ஆனால் நீதிமான்களுக்கோ நன்மை பலனாய் வரும். 22நல்லவன் தன் பேரப்பிள்ளைகளுக்குச் சுதந்தரத்தை வைத்துப்போகிறான்; ஆனால் பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படுகிறது. 23தரித்திரனுடைய உழாத நிலம் ஏராளமான உணவைத் தரக்கூடியது; ஆனால் நியாயமில்லாமையினால் அது அள்ளுண்டுபோகிறது. 24பிரம்பைப் பிடித்துக்கொள்கிறவன் தன் மகனை வெறுக்கிறான்; ஆனால் அவனில் அன்புகூருகிறவனோ ஜாக்கிரதையாய் அவனைக் கண்டித்துத் திருத்துகிறான். 25நீதிமான் தன் மனநிறைவாகச் சாப்பிடுகிறான்; ஆனால் துன்மார்க்கரின் வயிறோ பசியாயிருக்கும்.