சாலொமோனின் நீதிமொழிகள் தொடங்குகின்றன
10 1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறான், ஆனால் மூடமகன் தன் தாய்க்குத் துக்கத்தைத் தருகிறான். 2துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள் பிரயோஜனப்படாது, ஆனால் நீதி மரணத்திலிருந்து விடுவிக்கும். 3எங்கள் பிதா நீதிமானைப் பசியாய் விடமாட்டார், ஆனால் துன்மார்க்கரின் ஆசையை அவர் தடுத்துப்போடுகிறார். 4சோம்பேறிக் கைகள் உன்னைத் தரித்திரனாக்கும், ஆனால் சுறுசுறுப்பான கைகள் செல்வத்தைக் கொண்டுவரும். 5கோடைகாலத்தில் சேர்த்துவைக்கிறவன் விவேகமுள்ள மகன், ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவன் வெட்கத்தைக் கொண்டுவரும் மகன். 6நீதிமானின் தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும், ஆனால் துன்மார்க்கரின் வாய் கொடுமையை மறைத்துவைக்கும். 7நீதிமானின் நினைவு ஆசீர்வாதமாயிருக்கும், ஆனால் துன்மார்க்கரின் பேர் அழுகிப்போகும். 8ஞானமுள்ள இருதயம் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும், ஆனால் வாய்பேசும் மூடன் அழிவுக்குள்ளாவான். 9உத்தமத்தில் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான், ஆனால் தன் வழிகளைக் கோணலாக்குகிறவன் அம்பலமாவான். 10கண்சாடை காட்டுகிறவன் துன்பத்தை உண்டாக்குகிறான், வாய்பேசும் மூடன் அழிவுக்குள்ளாவான். 11நீதிமானின் வாய் ஜீவ ஊற்று, ஆனால் துன்மார்க்கரின் வாய் கொடுமையை மறைத்துவைக்கும். 12பகை சண்டையைக் கிளப்பிவிடும், ஆனால் அன்பு எல்லாக் குற்றங்களையும் மூடும். 13விவேகமுள்ளவனுடைய உதடுகளில், ஞானம் காணப்படும், ஆனால் புத்தியில்லாதவனுடைய முதுகுக்கோ பிரம்பு. 14ஞானிகள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள், ஆனால் மூடனுடைய வாய் அழிவை வரவழைக்கும். 15ஐசுவரியவானின் செல்வம் அவனுடைய அரணான நகரம்; ஏழையின் அழிவு அவனுடைய தரித்திரமே. 16நீதிமானின் கூலி ஜீவனுக்கு ஏதுவாகும்; துன்மார்க்கரின் ஆதாயம் பாவத்துக்கு ஏதுவாகும். 17புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவன் ஜீவவழியில் இருக்கிறான், ஆனால் கடிந்துகொள்ளுதலைப் புறக்கணிக்கிறவன் மற்றவர்களை வழிதப்பப்பண்ணுகிறான். 18பகையை மறைத்துவைக்கிறவன் பொய்யன், அவதூறைப் பரப்புகிறவன் மூடன். 19வார்த்தைகள் மிகுந்திருக்கும் இடத்தில் பாவம் இல்லாமற்போகாது; ஆனால் தன் நாவை அடக்குகிறவன் ஞானமுள்ளவன். 20நீதிமானின் நாவு தெரிந்தெடுத்த வெள்ளி; துன்மார்க்கரின் இருதயமோ அற்பமானது. 21நீதிமானின் உதடுகள் அநேகரைப் போஷிக்கும், ஆனால் மூடர் புத்தியில்லாமையால் மடிந்துபோகிறார்கள். 22எங்கள் பிதாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவரும், அதனோடு அவர் எந்தத் துக்கத்தையும் சேர்க்கமாட்டார். 23துன்மார்க்கம் செய்வது மூடனுக்கு விளையாட்டு, ஆனால் ஞானம் புத்திமானுக்குச் சந்தோஷம். 24துன்மார்க்கன் பயப்படுகிறதே அவன்மேல் வரும், ஆனால் நீதிமான்களின் ஆசை அருளப்படும். 25புயல் கடந்துபோனபின் துன்மார்க்கர் இல்லாமற்போகிறார்கள், ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் நிலைநிற்கிறார்கள். 26பற்களுக்குக் காடியும் கண்களுக்குப் புகையும் எப்படியோ, தன்னை அனுப்புகிறவர்களுக்குச் சோம்பேறியும் அப்படியே. 27எங்கள் பிதாவின் பயம் ஆயுசை நீடிக்கப்பண்ணும், ஆனால் துன்மார்க்கரின் வருஷங்கள் குறுகிப்போகும். 28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியைத் தரும், ஆனால் துன்மார்க்கரின் எதிர்பார்ப்பு அழிந்துபோகும். 29எங்கள் பிதாவின் வழி உத்தமர்களுக்கு அடைக்கலமாயிருக்கும், ஆனால் தீமைசெய்கிறவர்களுக்கு அழிவாயிருக்கும். 30நீதிமான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான், ஆனால் துன்மார்க்கர் தேசத்தில் நிலைத்திரார்கள். 31நீதிமானின் வாய் ஞானத்தை விளைவிக்கும், ஆனால் மாறுபாடான நாவு அறுக்கப்படும். 32நீதிமானின் உதடுகள் இணக்கமானதை அறியும், ஆனால் துன்மார்க்கரின் வாயோ மாறுபாடானதையே அறியும்.