செலோப்பியாத்தின் குமாரத்திகள்
27 1யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் வம்சங்களைச் சேர்ந்த, மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் குமாரனாகிய ஏப்பேரின் குமாரனாகிய செலோப்பியாத்தின் குமாரத்திகள் முன்வந்தார்கள். அவனுடைய குமாரத்திகளின் பெயர்கள்: மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், தீர்சாள். 2அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில், மோசேக்கு முன்பாகவும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாகவும், தலைவர்களுக்கும் சபை அனைத்துக்கும் முன்பாகவும் நின்று சொன்னது: 3“எங்கள் தகப்பன் வனாந்தரத்திலே மரித்துப்போனான். அவன் எங்கள் பிதாவுக்கு விரோதமாகக் கோராகின் கூட்டத்தோடே கூடினவர்களில் இருந்ததில்லை; அவன் தன் சொந்தப் பாவத்தினிமித்தமே மரித்தான்; அவனுக்குக் குமாரர் இருந்ததில்லை. 4எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாதிருந்ததினால், அவனுடைய பெயர் அவன் வம்சத்திலிருந்து ஏன் நீங்கிப்போகவேண்டும்? எங்கள் தகப்பனுடைய சகோதரர் நடுவே எங்களுக்கும் ஒரு காணியாட்சியைக் கொடும்” என்றார்கள்.
5அப்பொழுது மோசே அவர்களுடைய வழக்கை எங்கள் பிதாவுக்கு முன்பாகக் கொண்டுவந்தான். 6எங்கள் பிதா மோசேயை நோக்கி:
7“செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரியே. அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமான பங்கை நிச்சயமாய்க் கொடுத்து, அவர்களுடைய தகப்பனுடைய சுதந்தரத்தை அவர்களுக்குச் சேரப்பண்ணு. 8நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுடைய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குச் சேரப்பண்ணுங்கள். 9அவனுக்குக் குமாரத்தி இல்லாதிருந்தால், அவனுடைய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். 10அவனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுடைய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். 11அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவன் வம்சத்தில் அவனுக்கு நெருங்கிய இனத்தானுக்கு அவனுடைய சுதந்தரத்தைக் கொடுங்கள்; அவன் அதைச் சுதந்தரித்துக்கொள்வான். எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இது இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயப்பிரமாணமான கட்டளையாயிருக்கும்” என்றார்.
மோசே தேசத்தைப் பார்த்தல்
12பின்பு எங்கள் பிதா மோசேயை நோக்கி: “நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார். 13நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவாய். 14ஏனெனில், சீன் வனாந்தரத்திலே சபையார் வாக்குவாதம்பண்ணின நாளிலே, நீங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக அந்தத் தண்ணீரண்டையிலே என்னைப் பரிசுத்தர் என்று மகிமைப்படுத்தாமல், என் கட்டளைக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்; அதுவே சீன் வனாந்தரத்திலுள்ள காதேசின் மேரிபாவின் தண்ணீர்” என்றார்.
15அப்பொழுது மோசே எங்கள் பிதாவை நோக்கி: 16“மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் பிதாவாகிய தேவரீர், இந்தச் சபையின்மேல் ஒரு மனுஷனை ஏற்படுத்துவீராக; 17அவர்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அவர்களுக்கு முன்பாக உட்பிரவேசித்து, அவர்களை நடத்திக்கொண்டு புறப்பட்டு, அவர்களை உட்பிரவேசிக்கப்பண்ணும்படிக்கு ஒருவனை ஏற்படுத்துவீராக; அப்பொழுது எங்கள் பிதாவின் சபை மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இராது” என்றான்.
18அப்பொழுது எங்கள் பிதா மோசேயை நோக்கி: “ஆவி உள்ளவனாகிய நூனின் குமாரன் யோசுவாவை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, 19அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாகவும், சபை அனைத்துக்கும் முன்பாகவும் நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குப் பொறுப்பைக் கட்டளையிடு. 20இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் மகிமையில் சிலவற்றை அவன்மேல் வை. 21அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்பான்; அவன் எங்கள் பிதாவுக்கு முன்பாக ஊரீமின் நியாயத்தை அவனுக்காக விசாரிப்பான். எலெயாசாரின் வாக்கின்படியே அவனும், அவனோடேகூட இருக்கிற இஸ்ரவேல் புத்திரர் அனைவரும், சபை அனைத்தும் புறப்பட்டுப்போவார்கள், அவன் வாக்கின்படியே உட்பிரவேசிப்பார்கள்” என்றார்.
22எங்கள் பிதா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; அவன் யோசுவாவைத் தெரிந்துகொண்டு, அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாகவும், சபை அனைத்துக்கும் முன்பாகவும் நிறுத்தி, 23எங்கள் பிதா மோசேயின் மூலமாய்ச் சொன்னபடியே, அவன்மேல் தன் கைகளை வைத்து, அவனுக்குப் பொறுப்பைக் கட்டளையிட்டான்.