முதலில் உங்களையே ஆராய்ந்து பாருங்கள்
7 1“தீர்ப்பிடாதிருங்கள், அப்பொழுது நீங்களும் தீர்ப்பிடப்படமாட்டீர்கள். 2ஏனெனில் நீங்கள் எந்தத் தீர்ப்பினால் தீர்ப்பிடுகிறீர்களோ, அந்தத் தீர்ப்பினாலேயே நீங்களும் தீர்ப்பிடப்படுவீர்கள்; எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும். 3உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைக் கவனியாமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை ஏன் பார்க்கிறாய்? 4அல்லது, உன் கண்ணிலே உத்திரம் இருக்கும்போது, ‘உன் கண்ணிலிருக்கிற துரும்பை நான் எடுத்துவிடுகிறேன்’ என்று உன் சகோதரனிடம் எப்படிச் சொல்லுவாய்? 5மாயக்காரனே, முதலில் உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட தெளிவாய்ப் பார்ப்பாய்.
6“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்பாகப் போடாதேயுங்கள்; போட்டால் அவைகளைத் தங்கள் கால்களால் மிதித்து, திரும்பி உங்களைப் பீறிப்போடும்.
கேட்கிறவர்களுக்குப் பிதா கொடுக்கிறார்
7“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 8ஏனெனில் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9உங்களில் எந்த மனிதனாவது, தன் மகன் அப்பம் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10அல்லது மீன் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? 11பொல்லாதவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருந்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு நன்மையானவைகளை எத்தனை அதிகமாய்க் கொடுப்பார்!
12“ஆகையால், மனிதர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களுமாம்.
13“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; ஏனெனில் அழிவுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின்வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14ஆனால் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே.
அவைகளின் கனியினால் அறியப்படும்
15“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள், உள்ளேயோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிந்துகொள்வீர்கள். முள்ளுச்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்செடிகளில் அத்திப்பழங்களையும் சேர்க்கிறார்களா? 17அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனி கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனி கொடுக்கும். 18நல்ல மரம் கெட்ட கனி கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனி கொடுக்கமாட்டாது. 19நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும். 20ஆகையால், அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிந்துகொள்வீர்கள்.
பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மாத்திரமே
21“என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று சொல்லுகிறவன் எவனும் அல்ல, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பான். 22அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவில்லையா? உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தவில்லையா? உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்பார்கள். 23அப்பொழுது நான் அவர்களை நோக்கி, ‘நான் ஒருபோதும் உங்களை அறியேன்; அக்கிரமச் செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாய்ச் சொல்லுவேன்.
கன்மலையின்மேல் கட்டுங்கள்
24“ஆகையால், என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் எவனும், கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்திமானாகிய மனிதனுக்கு ஒப்பாயிருப்பான். 25மழை பெய்தது, வெள்ளம் வந்தது, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியது; ஆனாலும் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தபடியால் விழவில்லை. 26என்னுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனும், மணலின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியீனனாகிய மனிதனுக்கு ஒப்பாயிருப்பான். 27மழை பெய்தது, வெள்ளம் வந்தது, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியது; அது விழுந்தது; விழுந்த விழுகையும் பெரிதாயிருந்தது.”
28இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்; 29ஏனெனில், அவர்களுடைய வேதபாரகர்களைப்போல அல்ல, அதிகாரமுடையவராகவே அவர் அவர்களுக்குப் போதித்தார்.