பிதாவின் ஆச்சரியப்படத்தக்க தாராள குணம்
20 1“எங்கள் பிதாவின் ராஜ்யம், தன் திராட்சத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்துவதற்காக அதிகாலையில் புறப்பட்ட ஒரு நிலச்சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறது. 2அவன் அந்த வேலையாட்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலியைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்திற்கு அனுப்பினான். 3காலை ஒன்பது மணியளவில் அவன் புறப்பட்டுப்போய், சந்தை வெளியில் வேலையின்றி நிற்கும் மற்றவர்களைக் கண்டான். 4அவன் அவர்களை நோக்கி, ‘நீங்களும் திராட்சத்தோட்டத்திற்குப் போங்கள்; நியாயமானதை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். அவர்களும் போனார்கள். 5மறுபடியும் நண்பகல் பன்னிரண்டு மணியளவிலும், பிற்பகல் மூன்று மணியளவிலும் அவன் புறப்பட்டுப்போய், அப்படியே செய்தான். 6பிற்பகல் ஐந்து மணியளவில் அவன் புறப்பட்டுப்போய், அங்கே நிற்கும் மற்றவர்களைக் கண்டு, ‘நீங்கள் நாள்முழுவதும் இங்கே வேலையின்றி நிற்பது ஏன்?’ என்று கேட்டான்.”
7“அவர்கள், ‘எங்களை ஒருவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அதற்கு அவன், ‘நீங்களும் திராட்சத்தோட்டத்திற்குப் போங்கள்’ என்றான்.
8“மாலைநேரமானபோது, திராட்சத்தோட்டச் சொந்தக்காரன் தன் கண்காணிப்பாளனை நோக்கி, ‘வேலையாட்களைக் கூப்பிட்டு, கடைசியில் வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள் வரையில் அவர்களுக்குக் கூலியைக் கொடு’ என்றான். 9பிற்பகல் ஐந்து மணியளவில் அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு நாள் முழுவதற்குமான கூலியைப் பெற்றுக்கொண்டார்கள். 10முதலில் வந்தவர்கள் வந்தபோது, தாங்கள் அதிகமாய்ப் பெறுவோம் என்று நினைத்தார்கள்; ஆனாலும் அவர்களும் ஒவ்வொருவரும் ஒரு நாள் முழுவதற்குமான கூலியையே பெற்றுக்கொண்டார்கள். 11அதைப் பெற்றுக்கொண்டபோது, அவர்கள் நிலச்சொந்தக்காரனுக்கு விரோதமாய் முறுமுறுத்து, 12‘கடைசியில் வந்த இவர்கள் ஒரே ஒரு மணிநேரம்தான் வேலைசெய்தார்கள்; ஆனாலும் நாள்முழுவதின் பாரத்தையும் கொளுத்தும் வெயிலையும் சுமந்த எங்களுக்கு அவர்களைச் சமமாக்கிவிட்டீரே’ என்றார்கள்.
13“அதற்கு அவன் அவர்களில் ஒருவனை நோக்கி, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; ஒரு நாள் முழுவதற்குமான கூலிக்கு நீ என்னோடு ஒப்புக்கொள்ளவில்லையா? 14உன்னுடையதை எடுத்துக்கொண்டு போ; கடைசியில் வந்த இவனுக்கும் உனக்குக் கொடுத்ததைப்போலவே கொடுக்க நான் விரும்புகிறேன். 15என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராளமாய் இருப்பதால் உன் கண் பொறாமைகொள்கிறதா?’ என்றான். 16இவ்விதமாய், கடைசியானவர்கள் முதலாவதாயும், முதலானவர்கள் கடைசியாயும் இருப்பார்கள்.”
இயேசு சிலுவையை முன்னறிவிக்கிறார்
17இயேசு எருசலேமுக்குப் போகும்போது, பன்னிருவரையும் தனியே அழைத்துக்கொண்டு, வழியிலே அவர்களை நோக்கி:
18“இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபாரகர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணத்திற்குரியவரெனத் தீர்ப்பிட்டு, 19பரியாசம்பண்ணவும், சவுக்கால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் அவரைப் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; மூன்றாம் நாளிலோ அவர் உயிர்த்தெழுந்திருப்பார்” என்றார்.
மெய்யான மேன்மை பணிசெய்வதே
20அப்பொழுது செபெதேயுவின் குமாரரின் தாய் தன் குமாரரோடு இயேசுவினிடத்தில் வந்து, முழங்காற்படியிட்டு, அவரிடத்தில் ஒரு உதவியை வேண்டிக்கொண்டாள்.
21அவர் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அவள், “உம்முடைய ராஜ்யத்தில் என்னுடைய இந்த இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யும்” என்றாள்.
22அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது; நான் குடிக்கப்போகிற பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக்கூடுமா?” என்று கேட்டார். அவர்கள், “கூடும்” என்றார்கள்.
23அவர் அவர்களை நோக்கி, “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள் மெய்தான்; ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருளுவது என்னுடையதல்ல; அது என் பிதா யாருக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிறாரோ அவர்களுக்கே உரியது” என்றார்.
24மற்றப் பத்துப்பேரும் இதைக் கேட்டபோது, அந்த இரண்டு சகோதரர்மேலும் எரிச்சலடைந்தார்கள்.
25இயேசு அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து, “புறஜாதியாரின் அதிகாரிகள் அவர்களை ஆண்டுகொள்கிறார்கள் என்றும், அவர்களில் வல்லமையுள்ளவர்கள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் அறிவீர்கள். 26உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்; 27உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு அடிமையாயிருக்கக்கடவன். 28அப்படியே, மனுஷகுமாரனும் பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை செய்யவும், அநேகருக்கு மீட்புக்கிரயமாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.
இரண்டு குருடர் பார்வையடைகிறார்கள்
29அவர்கள் எரிகோவைவிட்டுப் புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 30அப்பொழுது வழியோரமாய் உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே போகிறாரென்று கேள்விப்பட்டு, “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். a a v30 ‘தாவீதின் குமாரன்’ என்பது, தாவீதின் அரச பரம்பரையிலிருந்து வரவிருந்த வாக்குப்பண்ணப்பட்ட ராஜாவைக் குறிக்கும், யூதர்களுக்கு நன்கறியப்பட்ட ஒரு பட்டப்பெயராயிருந்தது. 31அவர்கள் மவுனமாயிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள்; ஆனாலும் அவர்கள், “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள்.
32இயேசு நின்று, அவர்களை அழைத்து, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33அவர்கள் அவரை நோக்கி, “ஆண்டவரே, எங்கள் கண்கள் திறக்கப்படவேண்டும்” என்றார்கள்.
34இயேசு மனதுருகி, அவர்களுடைய கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.