எங்கள் பிதாவின் விவாகத் திட்டம்
10 1அவர் அவ்விடத்தைவிட்டு யூதேயாவின் எல்லைப்பகுதிக்கும் யோர்தானுக்கு அப்பாலும் புறப்பட்டுப் போனார்; திரளான ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள், அவர் தம்முடைய வழக்கத்தின்படி மறுபடியும் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
2சில பரிசேயர் அவரிடத்தில் வந்து, அவரைச் சோதிக்கும்படி, “ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா?” என்று கேட்டார்கள்.
3அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “மோசே உங்களுக்கு என்ன கட்டளையிட்டான்?” என்றார்.
4அதற்கு அவர்கள், “தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாம் என்று மோசே அனுமதித்தான்” என்றார்கள்.
5இயேசு அவர்களை நோக்கி, “உங்கள் இருதயம் கடினமாயிருந்தபடியால் இந்தக் கட்டளையை அவன் உங்களுக்கு எழுதினான். 6ஆனாலும் சிருஷ்டிப்பின் ஆரம்பமுதல் எங்கள் பிதா அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். 7‘இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இணைந்திருப்பான்; 8இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.’ இப்படியிருக்க, அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். 9ஆகையால், எங்கள் பிதா இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்றார்.
10வீட்டிற்குத் திரும்பிவந்தபின்பு, சீஷர்கள் இதைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாயிருக்கிறான். 12அப்படியே ஒரு ஸ்திரீ தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், அவளும் விபசாரம் செய்கிறவளாயிருக்கிறாள்” என்றார்.
பிதாவானவர் சிறுபிள்ளைகளை ஏற்றுக்கொள்கிறார்
13அவர் சிறுபிள்ளைகளைத் தொடும்படிக்கு அவைகளை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களை சீஷர்கள் அதட்டினார்கள்.
14இயேசு அதைக்கண்டு விசனமடைந்து, அவர்களை நோக்கி, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; ஏனெனில் எங்கள் பிதாவின் ராஜ்யம் இப்படிப்பட்டவர்களுடையது. 15எவனாகிலும் ஒரு சிறுபிள்ளையைப்போல எங்கள் பிதாவின் ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் அவன் ஒருபோதும் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
16பின்பு அவர் அவைகளை அணைத்துக்கொண்டு, அவைகள்மேல் தம்முடைய கைகளை வைத்து, அவைகளை ஆசீர்வதித்தார்.
மிகுதியாய் உடையவனாயிருந்தும் ஒன்று குறைவுபட்டவன்
17அவர் புறப்பட்டு வழியில் போகும்போது, ஒருவன் ஓடிவந்து, அவர்முன்பாக முழங்கால்படியிட்டு, “நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
18அதற்கு இயேசு, “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? எங்கள் பிதா ஒருவர்தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 19‘கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு’ என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாய்” என்றார்.
20அதற்கு அவன், “போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
21இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து, “உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானதையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
22இந்த வார்த்தையினால் அவன் மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்; ஏனெனில் அவன் மிகுந்த சொத்துக்கள் உள்ளவனாயிருந்தான்.
23அப்பொழுது இயேசு சுற்றிலும் பார்த்து, தம்முடைய சீஷர்களை நோக்கி, “ஐசுவரியமுள்ளவர்கள் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது!” என்றார்.
24சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி, “பிள்ளைகளே, எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது! 25ஐசுவரியமுள்ளவன் எங்கள் பிதாவின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
26அவர்கள் அதிகமாய் ஆச்சரியப்பட்டு, “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
27இயேசு அவர்களைப் பார்த்து, “இது மனுஷரால் கூடாதகாரியம்தான்; ஆனாலும் எங்கள் பிதாவால் கூடாதகாரியமல்ல; எங்கள் பிதாவால் எல்லாம் கூடும்” என்றார்.
28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, “இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே” என்று சொல்லத்தொடங்கினான்.
29அதற்கு இயேசு, “என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தாயையாவது, தகப்பனையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
30இப்பொழுது இக்காலத்திலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், வருங்காலத்திலே நித்தியஜீவனையும் அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 31ஆகிலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
இயேசு தமது மரணத்தை மூன்றாம் முறை முன்னறிவிக்கிறார்
32அவர்கள் எருசலேமுக்குப் போகிற வழியிலே போய்க்கொண்டிருந்தார்கள்; இயேசு அவர்களுக்கு முன்னாக நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், பின்சென்றவர்கள் பயந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் மறுபடியும் தனியே அழைத்துக்கொண்டு, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்:
33“இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணத்துக்குள்ளாகத் தீர்த்து, புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். 34அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அவரை வாரினால் அடித்து, அவரைக் கொலைசெய்வார்கள்; மூன்றுநாளைக்குப்பின்பு அவர் உயிர்த்தெழுந்திருப்பார்” என்றார்.
ஊழியம் செய்வதன் மூலம் மேன்மை
35அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து, “போதகரே, நாங்கள் கேட்கப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
36அவர் அவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்றார்.
37அதற்கு அவர்கள், “உம்முடைய மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்” என்றார்கள்.
38இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்கிறது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா?” என்றார்.
39அதற்கு அவர்கள், “கூடும்” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்; நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 40ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருளுவது என்னுடையதல்ல; அது யாருக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே அருளப்படும்” என்றார்.
41மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் எரிச்சலடைந்தார்கள்.
42இயேசு அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து, அவர்களை நோக்கி, “புறஜாதியாரின் அதிபதிகளாக எண்ணப்படுகிறவர்கள் அவர்களை ஆண்டுகொள்ளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் அறிந்திருக்கிறீர்கள். 43உங்களுக்குள்ளே அப்படியிருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்; 44உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் அடிமையாயிருக்கக்கடவன். 45மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்றார்.
பர்திமேயு பார்வையடைகிறான்
46பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். இயேசுவும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகையில், திமேயுவின் குமாரனாகிய பர்திமேயு என்னும் ஒரு குருடன் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கூப்பிடத்தொடங்கினான். 48அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள்; அவனோ, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று அதிகமாய்க் கூப்பிட்டான்.
49அப்பொழுது இயேசு நின்று, “அவனை அழையுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து, “திடன்கொள்; எழுந்திரு, அவர் உன்னை அழைக்கிறார்” என்றார்கள்.
50உடனே அவன் தன் மேலங்கியை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51இயேசு அவனை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்றார். அதற்கு அந்தக் குருடன், “ரபூனி, நான் மறுபடியும் பார்வையடையவேண்டும்” என்றான். a a v51 “ரபூனி” என்பது இயேசுவை அழைக்கும் இருதயத்திலிருந்து பிறக்கும் அன்பான, தனிப்பட்ட விதமாகும் — ஆழ்ந்த நம்பிக்கையோடே சொல்லப்படும் “என் போதகரே” என்பதாம்.
52இயேசு அவனை நோக்கி, “போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.