இடறல்களைக் குறித்தும் மன்னிப்பைக் குறித்தும்
17 1அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: “இடறல்கள் வராமலிருப்பது கூடாதகாரியம், ஆனாலும் எவனால் அவை வருகிறதோ அவனுக்கு ஐயோ! 2இந்தச் சிறியவர்களில் ஒருவனை இடறச்செய்வதைப்பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு அவன் கடலில் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
3“உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனந்திரும்பினால், அவனுக்கு மன்னியுங்கள். 4அவன் ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் திரும்பிவந்து, ‘மனந்திரும்புகிறேன்’ என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்றார்.
5அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்!” என்றார்கள்.
6அதற்குக் கர்த்தர்: “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்தக் காட்டத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படு’ என்று சொல்லுவீர்கள், அது உங்களுக்குக் கீழ்ப்படியும். 7உங்களில் ஒருவனுக்கு உழுகிறதற்காவது ஆடுமேய்க்கிறதற்காவது ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலிலிருந்து வரும்போது, அவனை நோக்கி, ‘உடனே வந்து பந்தியிருப்பாய்’ என்று அவன் சொல்லுவானா? 8அதற்கு மாறாக, ‘நான் சாப்பிடும்படி எனக்கு போஜனத்தை ஆயத்தப்படுத்து, நான் புசித்துக் குடித்துத் தீருமளவும் அரைகட்டிக்கொண்டு எனக்குப் பணிவிடைசெய், அதற்குப்பின்பு நீ புசித்துக் குடிக்கலாம்’ என்று அவனுக்குச் சொல்லமாட்டானா?
9“தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவன் அவனுக்கு நன்றி செலுத்துவானா? 10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் செய்தபின்பு: ‘நாங்கள் அபாத்திரமான வேலைக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
எங்கள் பிதா பத்து குஷ்டரோகிகளைக் குணமாக்குகிறார்
11பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாய்ப் போகையில், சமாரியாவுக்கும் கலிலேயாவுக்கும் நடுவே கடந்துபோனார். 12அவர் ஒரு கிராமத்தில் பிரவேசிக்கையில், குஷ்டரோகமுள்ள பத்துப்பேர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, தூரத்திலே நின்று,
13“இயேசுவே, ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்!” என்று உரத்த சத்தமிட்டு கூப்பிட்டார்கள்.
14அவர்களை அவர் கண்டபோது: “நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அவர்கள் போகையிலே சுத்தமாக்கப்பட்டார்கள்.
15அவர்களில் ஒருவன் தான் குணமாக்கப்பட்டதைக் கண்டு, எங்கள் பிதாவை உரத்த சத்தத்தோடே மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பிவந்து, 16இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
17அப்பொழுது இயேசு: “சுத்தமாக்கப்பட்டவர்கள் பத்துப்பேர் அல்லவா? மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18எங்கள் பிதாவை மகிமைப்படுத்துகிறதற்கு இந்த அந்நியனைத்தவிர வேறொருவனும் திரும்பிவரக் காணப்படவில்லையே” என்று சொல்லி, 19அவனை நோக்கி: “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார்.
ராஜ்யம் ஏற்கெனவே உங்கள் நடுவில் இருக்கிறது
20எங்கள் பிதாவின் ராஜ்யம் எப்பொழுது வருமென்று பரிசேயர் அவரிடத்தில் கேட்டபோது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “எங்கள் பிதாவின் ராஜ்யம் பார்வைக்குக் காணும்படியாக வராது. 21‘இதோ இங்கே!’ அல்லது ‘அதோ அங்கே!’ என்றும் அவர்கள் சொல்லமாட்டார்கள்; ஏனெனில், இதோ, எங்கள் பிதாவின் ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்றார்.
22பின்பு அவர் சீஷர்களை நோக்கி: “மனுஷகுமாரனுடைய நாட்களில் ஒன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படும் நாட்கள் வரும், ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். 23‘இதோ அங்கே!’ அல்லது ‘இதோ இங்கே!’ என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள்; நீங்கள் போகாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருங்கள். 24மின்னல் வானத்தின் ஒரு கடையிலிருந்து மறுகடைவரைக்கும் மின்னிப் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே இருப்பார். 25ஆனாலும் முதலாவது அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியாரால் ஆகாதவரென்று தள்ளப்படவேண்டும். 26நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். 27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும், அவர்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வந்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் அழித்துப்போட்டது. 28லோத்துவின் நாட்களில் நடந்ததும் அப்படியே: அவர்கள் புசித்தும் குடித்தும், கொண்டும் விற்றும், நட்டும் கட்டியும் வந்தார்கள்; 29ஆனாலும் லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே, வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பொழிந்து, அனைவரையும் அழித்துப்போட்டது. 30அப்படியே மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும். 31அந்த நாளிலே வீட்டின்மேலிருக்கிறவன் வீட்டிலுள்ள தன் பொருள்களை எடுத்துக்கொள்ள இறங்காதிருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவனும் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். 32லோத்துவின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். 33தன் ஜீவனைக் காக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; தன் ஜீவனை இழந்துபோகிறவனோ அதைக் காத்துக்கொள்வான். 34நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் இரண்டுபேர் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் விடப்படுவான். 35இரண்டு ஸ்திரீகள் ஒன்றாய் மாவரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் விடப்படுவாள்” என்றார். a a v35 மிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் இங்கே 36-ஆம் வசனம் இல்லை; பிற்கால பிரதிகள் சேர்க்கின்றன: “வயலில் இரண்டுபேர் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் விடப்படுவான்.”
37அதற்கு அவர்கள்: “எங்கே, ஆண்டவரே?” என்று கேட்டார்கள். அவர்: “பிணம் எங்கே இருக்கிறதோ, அங்கே கழுகுகள் வந்து கூடும்” என்றார்.