இஸ்ரவேலில் ராஜா இல்லாதிருந்த காலத்தில்
19 1அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை. எப்பிராயீமின் மலைநாட்டின் உட்புறத்தில் தங்கியிருந்த ஒரு லேவியன், யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து ஒரு மறுமனையாட்டியை எடுத்துக்கொண்டான். 2அவனுடைய மறுமனையாட்டி அவனுக்கு உண்மையற்றவளாயிருந்து, அவனைவிட்டு யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்த தன் தகப்பனுடைய வீட்டுக்குப் போய், அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். 3அவளுடைய கணவன் அவளோடு இதமாய்ப் பேசி அவளைத் திரும்ப அழைத்துவருவதற்காக, தன் வேலைக்காரனையும் இரண்டு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு அவளைத் தேடிப் புறப்பட்டான். அவள் அவனைத் தன் தகப்பனுடைய வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனாள்; அந்தப் பெண்ணின் தகப்பன் அவனைக் கண்டு சந்தோஷப்பட்டான். 4அவனுடைய மாமனாகிய அந்தப் பெண்ணின் தகப்பன் அவனைத் தங்கும்படி வற்புறுத்தினதால், அவன் அவனிடத்தில் மூன்று நாள் தங்கியிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இரவைக் கழித்தார்கள்.
5நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தபோது, அவன் புறப்படுவதற்கு ஆயத்தமானான். ஆனால் அந்தப் பெண்ணின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: “கொஞ்சம் அப்பம் புசித்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொண்டு பின்பு போ” என்றான். 6அப்படியே அவ்விருவரும் உட்கார்ந்து ஒருமித்துப் புசித்துக் குடித்தார்கள். அந்தப் பெண்ணின் தகப்பன் அந்த மனிதனை நோக்கி: “தயவுசெய்து, இந்த இரவும் தங்கி உன் இருதயம் மகிழ்ச்சியாயிருக்கட்டும்” என்றான். 7அந்த மனிதன் புறப்படுவதற்கு எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்தி வேண்டிக்கொண்டதினால், அவன் மறுபடியும் அங்கே அந்த இரவைக் கழித்தான். 8ஐந்தாம் நாள் அதிகாலையில் புறப்படுவதற்கு எழுந்தபோது, அந்தப் பெண்ணின் தகப்பன்: “தயவுசெய்து உன்னைத் தேற்றிக்கொள், மத்தியான வேளைமட்டும் தாமதித்திரு” என்றான். அப்படியே அவ்விருவரும் புசித்தார்கள். 9அந்த மனிதன் தன் மறுமனையாட்டியோடும் வேலைக்காரனோடும் புறப்படுவதற்கு எழுந்தபோது, அவனுடைய மாமனாகிய அந்தப் பெண்ணின் தகப்பன்: “இதோ, பொழுது சாய்ந்துபோகிறது; இன்றிரவு தங்கு; பார், நாள் முடிந்துபோகிறது; இங்கே இரவைக் கழித்து உன் இருதயம் மகிழட்டும்; நாளைக்கு அதிகாலையில் எழுந்து உன் வழியே பிரயாணப்பட்டு உன் வீட்டுக்குப் போ” என்றான். 10ஆனால் அந்த மனிதன் அந்த இரவைக் கழிக்க மனதில்லாமல் எழுந்து புறப்பட்டு, சேணங்கட்டப்பட்ட தன் இரண்டு கழுதைகளோடும் தன் மறுமனையாட்டியோடும் எபூஸ் என்னும் எருசலேமுக்கு எதிரே வந்தான். 11எபூசுக்குச் சமீபமாய் வந்தபோது, பொழுது மிகவும் சாய்ந்திருந்ததால், வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: “தயவுசெய்து வாரும், எபூசியருடைய இந்தப் பட்டணத்தில் நாம் ஒதுங்கி இரவைக் கழிப்போம்” என்றான்.
12அதற்கு அவனுடைய எஜமான்: “இஸ்ரவேல் புத்திரருடையதல்லாத அந்நியருடைய பட்டணத்தில் நாம் ஒதுங்கமாட்டோம்; கிபியாமட்டும் போவோம்” என்றான். 13அவன் தன் வேலைக்காரனை நோக்கி: “வா, இந்த இடங்களில் ஒன்றை அடைந்து, கிபியாவிலாவது ராமாவிலாவது இரவைக் கழிப்போம்” என்றான். 14அப்படியே அவர்கள் தங்கள் வழியே நடந்துபோனார்கள்; பென்யமீனிலுள்ள கிபியாவுக்குச் சமீபமாய் அவர்களுக்குப் பொழுது அஸ்தமித்தது. 15அவர்கள் கிபியாவிலே இரவைக் கழிக்கும்படி ஒதுங்கினார்கள். அவன் உள்ளே போய்ப் பட்டணத்தின் வீதியிலே உட்கார்ந்தான்; ஆனால் இரவைக் கழிக்கும்படி ஒருவனும் அவர்களைத் தன் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.
16அந்த வேளையிலே ஒரு கிழவன் வயல்வேலையை முடித்துவிட்டு வந்தான். அவன் எப்பிராயீமின் மலைநாட்டைச் சேர்ந்தவனாயிருந்து, கிபியாவிலே அந்நியனாய்த் தங்கியிருந்தான்; அவ்வூர் மனிதர் பென்யமீனியர். 17அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்து, பட்டணத்தின் வீதியிலே அந்தப் பிரயாணியைக் கண்டு: “நீ எங்கே போகிறாய்? எங்கேயிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
18அதற்கு அவன்: “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து எப்பிராயீமின் மலைநாட்டின் உட்புறமட்டும் பிரயாணம்பண்ணுகிறோம்; நான் அங்கேயுள்ளவன். நான் யூதாவிலுள்ள பெத்லகேமுக்குப் போயிருந்தேன்; இப்பொழுது எங்கள் பிதாவின் வீட்டுக்குப் போகிறேன்; ஆனால் ஒருவனும் என்னைத் தன் வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை. 19எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீவனமும், எனக்கும் உம்முடைய அடியாளுக்கும் உம்முடைய ஊழியக்காரரோடிருக்கும் வாலிபனுக்கும் அப்பமும் திராட்சரசமும் எங்களிடத்தில் உண்டு; ஒன்றும் குறைவில்லை” என்றான்.
20அதற்கு அந்தக் கிழவன்: “உனக்குச் சமாதானம்; உனக்குத் தேவையானதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்; வீதியிலேமட்டும் இரவைக் கழிக்கவேண்டாம்” என்று சொல்லி, 21அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவி, புசித்துக் குடித்தார்கள்.
22அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கையில், இதோ, அந்தப் பட்டணத்தின் பேலியாளின் மக்களாகிய துஷ்டர் வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி, வீட்டுக்கு உடையவனாகிய அந்தக் கிழவனை நோக்கி: “உன் வீட்டுக்குள் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனோடே சம்போகம்பண்ணவேண்டும்” என்று கூப்பிட்டார்கள்.
23அப்பொழுது வீட்டுக்கு உடையவன் அவர்களிடத்தில் வெளியே போய்: “வேண்டாம், என் சகோதரரே, தயவுசெய்து பொல்லாப்புச் செய்யாதேயுங்கள்; இந்த மனிதன் என் வீட்டுக்குள் வந்திருக்கிறானே; இந்த மதிகேடான காரியத்தைச் செய்யாதேயுங்கள். 24இதோ, கன்னிகையாகிய என் மகளும் அவனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை நான் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களைக் கற்பழித்து, உங்கள் பார்வைக்கு நலமானபடி அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனால் இந்த மனிதனுக்கோ இந்த மதிகேடான காரியத்தைச் செய்யாதேயுங்கள்” என்றான்.
25ஆனால் அந்த மனிதர் அவன் சொல்லைக் கேட்க மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அந்த மனிதன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து வெளியே அவர்களிடத்தில் தள்ளினான்; அவர்கள் அவளைக் கற்பழித்து, இராமுழுவதும் விடியற்காலமட்டும் அவளைக் கொடுமைப்படுத்தி, பொழுது விடிகையில் அவளை விட்டுவிட்டார்கள். 26விடியற்காலத்தில் அந்த ஸ்திரீ வந்து, பொழுது விடியுமட்டும், தன் எஜமான் இருந்த அந்த மனிதனுடைய வீட்டு வாசலில் விழுந்துகிடந்தாள். 27விடியற்காலத்தில் அவளுடைய எஜமான் எழுந்து, வீட்டின் கதவுகளைத் திறந்து, தன் வழியே போகும்படி வெளியே வந்தபோது, இதோ, அவனுடைய மறுமனையாட்டியாகிய அந்த ஸ்திரீ தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்து, வீட்டு வாசலில் விழுந்துகிடந்தாள். 28அவன் அவளை நோக்கி: “எழுந்திரு, போவோம்” என்றான்; ஆனால் மறுமொழி ஒன்றுமில்லை. அப்பொழுது அவன் அவளைக் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, தன் வீட்டுக்குப் பயணமானான்.
29அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளின்படியே பன்னிரண்டு துண்டுகளாய்த் துண்டித்து, இஸ்ரவேலின் எல்லைகளெங்கும் அனுப்பினான். 30அதைக் கண்ட யாவரும்: “இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாள்முதல் இந்நாள்மட்டும் இப்படிப்பட்ட காரியம் நடந்ததும் இல்லை, காணப்பட்டதும் இல்லை; இதைச் சிந்தித்து, ஆலோசனைபண்ணிப் பேசுங்கள்” என்றார்கள்.