சிம்சோனின் திருமணத்தில் பிதாவின் கரம்
14 1சிம்சோன் திம்னாத்துக்குப் போனான்; அங்கே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு இளம் பெண்ணைக் கண்டான். 2அவன் திரும்பி வந்து, தன் தகப்பனிடத்திலும் தாயினிடத்திலும், “திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; இப்பொழுது அவளை எனக்கு மனைவியாகக் கொள்ளுங்கள்” என்றான்.
3அப்பொழுது அவனுடைய தகப்பனும் தாயும், “உன் உறவினரிலும் என் ஜனங்கள் எல்லாருக்குள்ளும் ஒரு பெண் இல்லையா? விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்திலிருந்து நீ ஒரு மனைவியை எடுக்கவேண்டுமா?” என்றார்கள். ஆனாலும் சிம்சோன் தன் தகப்பனை நோக்கி, “அவளையே எனக்குக் கொள்ளுங்கள்; அவளே என் கண்களுக்குச் சரியானவள்” என்றான்.
4இது எங்கள் பிதாவினால் உண்டானது என்று அவனுடைய தகப்பனும் தாயும் அறியாதிருந்தார்கள்; பெலிஸ்தருக்கு விரோதமாய் நடந்துகொள்ள ஒரு காரணத்தை அவர் தேடினார்; ஏனெனில் அக்காலத்தில் பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டுகொண்டிருந்தார்கள்.
5சிம்சோன் தன் தகப்பனோடும் தாயோடும் திம்னாத்துக்குப் போனான். திம்னாத்தின் திராட்சத்தோட்டங்களுக்கு அருகே, ஒரு பாலசிங்கம் அவனுக்கு எதிராகக் கெர்ச்சித்துக்கொண்டு வந்தது. 6அப்பொழுது எங்கள் பிதாவின் ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினார்; அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அந்தச் சிங்கத்தை ஒரு வெள்ளாட்டுக்குட்டியைப்போலப் பீறிப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தகப்பனுக்கோ தாய்க்கோ அறிவிக்கவில்லை. 7பின்பு அவன் போய், அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்களுக்குச் சரியானவளாயிருந்தாள்.
8சிலநாட்கள் சென்றபின், அவளைத் திருமணம் செய்யத் திரும்பி வருகையில், அந்தச் சிங்கத்தின் பிணத்தைப் பார்க்க வழிவிலகிப் போனான். இதோ, அதின் உடலுக்குள்ளே ஒரு தேனீக் கூட்டமும் தேனும் இருந்தன. 9அவன் அந்தத் தேனைத் தன் கைகளில் அள்ளிக்கொண்டு, நடந்துபோகையில் சாப்பிட்டான். தன் தகப்பனிடத்திலும் தாயினிடத்திலும் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள். ஆனாலும் அதைச் சிங்கத்தின் பிணத்திலிருந்து அள்ளினேன் என்று அவர்களுக்குச் சொல்லவில்லை. 10அவனுடைய தகப்பன் அந்தப் பெண்ணிடத்துக்குப் போனான்; வாலிபர் செய்வதுபோல, சிம்சோன் அங்கே ஒரு விருந்தை வைத்தான். 11அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடிருக்க முப்பது தோழர்களைக் கொண்டுவந்தார்கள்.
12சிம்சோன் அவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு ஒரு விடுகதையைக் கூறுகிறேன்; விருந்தின் ஏழு நாட்களுக்குள்ளே அதை நீங்கள் விடுவித்துச் சொன்னால், நான் உங்களுக்கு முப்பது சணல்நூல் ஆடைகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். 13உங்களால் விடையளிக்க முடியாவிட்டால், நீங்கள் எனக்கு முப்பது சணல்நூல் ஆடைகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும்” என்றான். அதற்கு அவர்கள், “உன் விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்போம்” என்றார்கள்.
14அப்பொழுது அவன், “தின்பவனிலிருந்து தின்பது வந்தது; பலவானிலிருந்து இனிப்பானது வந்தது” என்றான். மூன்று நாட்களாக அவர்களால் அந்த விடுகதையை விடுவிக்க முடியவில்லை.
15நான்காம் நாளில் அவர்கள் சிம்சோனின் மனைவியை நோக்கி, “அந்த விடுகதையை எங்களுக்கு விளக்கிச் சொல்லும்படி உன் புருஷனை நயமாய் இணக்கு; இல்லாவிட்டால் உன்னையும் உன் தகப்பன் வீட்டாரையும் நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவோம். எங்களை ஏழ்மைப்படுத்தவா இங்கே அழைத்தீர்கள்?” என்றார்கள்.
16அப்பொழுது சிம்சோனின் மனைவி அவன்மேல் விழுந்து அழுது, “நீர் என்னை வெறுக்கிறீரேயன்றி நேசிக்கவில்லை; என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைக் கூறினீர், அதின் விடையை எனக்கு அறிவிக்கவில்லையே” என்றாள். அதற்கு அவன், “அதை என் தகப்பனுக்கும் தாய்க்கும் நான் அறிவிக்கவில்லையே; உனக்கு அதை நான் சொல்வேனோ?” என்றான்.
17அவர்களுடைய விருந்தின் ஏழு நாட்களும் அவள் அவன்மேல் விழுந்து அழுதுகொண்டிருந்தாள்; ஏழாம் நாளில், அவள் அவனை நெருக்கினபடியால், அவளுக்கு அதைச் சொன்னான். அப்பொழுது அவள் அந்த விடுகதையைத் தன் ஜனங்களுக்கு அறிவித்தாள். 18ஏழாம் நாளில், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன், அந்தப் பட்டணத்து மனுஷர் அவனை நோக்கி, “தேனைப்பார்க்கிலும் இனிமையானது எது? சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானது எது?” என்றார்கள். அதற்குச் சிம்சோன், “நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தால், என் விடுகதையை ஒருபோதும் விடுவித்திருக்கமாட்டீர்கள்” என்றான்.
19அப்பொழுது எங்கள் பிதாவின் ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினார்; அவன் அஸ்கலோனுக்குப் போய், அவர்களில் முப்பது பேரைக் கொன்று, அவர்களுடைய உடைமைகளை எடுத்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அவர்களுடைய வஸ்திரங்களைக் கொடுத்தான். கோபம் மூண்டவனாய், தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான். 20சிம்சோனின் மனைவியோ, அவனுக்குத் தோழனாயிருந்த, அவனுடைய சிறந்த வாலிபனுக்குக் கொடுக்கப்பட்டாள்.