பிதாவானவர் அடைக்கலப் பட்டணங்களை ஏற்படுத்துகிறார்
20 1பின்பு எங்கள் பிதா யோசுவாவோடு பேசினார்:
2"இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்: ‘நான் மோசே மூலமாய் உங்களுக்குச் சொன்ன அடைக்கலப் பட்டணங்களை உங்களுக்காக நியமித்துக்கொள்ளுங்கள், 3அறியாமல், தற்செயலாய் ஒருவனைக் கொன்றவன் அங்கே ஓடிப்போகும்படிக்கே; இரத்தப்பழிவாங்குகிறவனுக்குத் தப்பி நீங்கள் அடைக்கலம் புகும் இடமாக அது இருக்கும். 4இந்தப் பட்டணங்களில் ஒன்றுக்கு ஓடிவருகிறவன் அந்தப் பட்டணத்து வாசலின் நடையில் நின்று, அந்தப் பட்டணத்து மூப்பர்களுக்குத் தன் காரியத்தை விவரிக்கக்கடவன். அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள் ஏற்றுக்கொண்டு, அவனுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து, அவன் தங்கள் நடுவே வாழும்படி செய்யக்கடவர்கள். 5இரத்தப்பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்து வந்தால், அவர்கள் அந்தக் கொலைசெய்தவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கூடாது; ஏனெனில் அவன் முன்பகை இல்லாமல், அறியாமலே தன் அயலானை அடித்துக் கொன்றான். 6சபைக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு நிற்குமளவும், அக்காலத்தில் ஊழியம் செய்யும் பிரதான ஆசாரியன் மரிக்குமளவும், அவன் அந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கவேண்டும். பின்பு அந்தக் கொலைசெய்தவன் தான் ஓடிவந்த பட்டணமாகிய தன் சொந்தப் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகலாம்.’"
7அப்படியே அவர்கள் கலிலேயாவிலுள்ள நப்தலியின் மலைநாட்டில் கேதேசையும், எப்பிராயீமின் மலைநாட்டில் சீகேமையும், யூதாவின் மலைநாட்டில் கீரியாத்அர்பா என்னும் எப்ரோனையும் பிரித்துவைத்தார்கள். 8எரிகோவுக்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பாலே, ரூபனுடைய கோத்திரத்திலிருந்து சமபூமியான வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத்துடைய கோத்திரத்திலிருந்து கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசேயுடைய கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கோலானையும் கொடுத்தார்கள். 9அறியாமல் ஒருவனைக் கொன்றவன் அங்கே ஓடிப்போய், சபைக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு நிற்குமுன்னே இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கையால் சாகாதபடிக்கு, எல்லா இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்களுக்குள்ளே தங்கியிருக்கிற அந்நியர்களுக்கும் நியமிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.