சிமியோனுக்கு எங்கள் பிதாவின் பங்கு
19 1இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு, சிமியோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. அவர்களுடைய சுதந்தரம் யூதாவின் சுதந்தரத்திற்குள் இருந்தது. 2அவர்களுடைய சுதந்தரமாக அவர்களுக்கு இருந்தவை: பெயெர்செபா, சேபா, மொலதா, 3ஆசார்சூவால், பாலா, ஏசேம், 4எல்தோலாத், பெத்தூல், ஓர்மா, 5சிக்லாக், பெத்மார்காபோத், ஆசார்சூசா, 6பெத்லெபாயோத், சருகேன் என்னும் பதின்மூன்று பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்; 7ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்; 8தென்தேசத்திலுள்ள ராமா என்னும் பாலாத்பெயேர்வரைக்கும் இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த சகல கிராமங்களும். இதுவே சிமியோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். 9யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிகவும் பெரிதாயிருந்ததால், சிமியோனின் சுதந்தரம் யூதாவின் பங்கிலிருந்தே கிடைத்தது; ஆகையால் சிமியோன் புத்திரர் யூதாவின் சுதந்தரத்திற்குள்ளே சுதந்தரம் அடைந்தார்கள்.
செபுலோனுக்கு எங்கள் பிதாவின் பங்கு
10மூன்றாம் சீட்டு செபுலோன் சந்ததியாருக்கு அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. அவர்களுடைய சுதந்தரத்தின் எல்லை சாரீத்வரைக்கும் எட்டியது. 11அவர்களுடைய எல்லை மேற்கே மரலாவுக்கு ஏறி, தபேசேத்தைத் தொட்டு, யோக்நேயாமுக்குக் கிழக்கே இருந்த ஆற்றுவரைக்கும் எட்டியது. 12சாரீத்திலிருந்து அது கிழக்கே, சூரியன் உதிக்கும் திசைக்கு நேராக, கிஸ்லோத்தாபோரின் எல்லைமட்டும் திரும்பி, தாபிராத்துக்குச் சென்று, யாப்பியாவுக்கு ஏறிற்று. 13அங்கிருந்து அது கிழக்கே காத்எப்பேருக்கும் இத்காத்சீனுக்கும் கடந்து, நேயாவுக்கு நேராக வளைந்து, ரிம்மோனுக்கு வெளிப்பட்டது. 14வடக்கே அந்த எல்லை அன்னாத்தோனுக்குத் திரும்பி, இப்தாயேலின் பள்ளத்தாக்கில் முடிந்தது. 15அதில் கட்டாத், நாகலால், சிம்ரோன், இதலா, பெத்லகேம் என்பவைகளும் அடங்கியிருந்தன. இவை பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமாம். 16இதுவே செபுலோன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்; இந்தப் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
இசக்காருக்கு எங்கள் பிதாவின் பங்கு
17நான்காம் சீட்டு இசக்காருக்கு, இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. 18அவர்களுடைய எல்லைக்குள் யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19அப்பராயீம், சீயோன், அனாகராத், 20ரப்பீத், கீஷியோன், ஏபேஸ், 21ரேமேத், என்கன்னீம், என்அத்தா, பெத்பாசேஸ் என்பவைகள் அடங்கியிருந்தன. 22அந்த எல்லை தாபோரையும் சகசூமாவையும் பெத்செமேசையும் தொட்டு, யோர்தானில் முடிந்தது. இவை பதினாறு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமாம். 23இதுவே இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்; இந்தப் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
ஆசேருக்கு எங்கள் பிதாவின் பங்கு
24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. 25அவர்களுடைய எல்லைக்குள் எல்காத், அலி, பேதேன், அக்சாப், 26அலம்மேலேக், அமாத், மீசால் என்பவைகள் அடங்கியிருந்தன; மேற்கே அது கர்மேலையும் சீகோர்லிப்னாத்தையும் தொட்டது. 27அது கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனையும் இப்தாயேலின் பள்ளத்தாக்கையும் தொட்டு, வடக்கே பெத்ஏமேக்குக்கும் நேயியேலுக்கும் சென்று, இடதுபுறத்தில் காபூலுக்கு வெளிப்பட்டு, 28எப்ரோன், ரேகோப், அம்மோன், கானா என்பவைகளையும் பெரிய சீதோன்வரைக்கும் உட்படுத்தியது. 29அந்த எல்லை ராமாவுக்கும், தீரு என்னும் அரண்செய்யப்பட்ட பட்டணத்துக்கும் திரும்பி, ஓசாவுக்குத் திரும்பி, அக்சீப் நாட்டுப் பகுதியில் கடலில் முடிந்தது, 30உம்மா, ஆப்பேக், ரேகோப் என்பவைகளோடேகூட. இவை இருபத்திரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமாம். 31இதுவே ஆசேர் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்; இந்தப் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
நப்தலிக்கு எங்கள் பிதாவின் பங்கு
32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு, நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. 33அவர்களுடைய எல்லை எலேபிலிருந்து, சானன்னீமிலுள்ள கர்வாலிமரத்திலிருந்து, அதாமிநேகேபையும் யாப்நியேலையும் கடந்து லக்கூம்வரைக்கும் சென்று, யோர்தானில் முடிந்தது. 34அந்த எல்லை மேற்கே அஸ்நோத்தாபோருக்குத் திரும்பி, அங்கிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், சூரியன் உதிக்கும் திசையில் யோர்தானண்டையிலுள்ள யூதாவையும் தொட்டது. 35அரண்செய்யப்பட்ட பட்டணங்களாவன: சித்தீம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரோத், 36அதாமா, ராமா, ஆத்சோர், 37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38ஈரோன், மிக்தலேல், ஓரேம், பெத்அனாத், பெத்செமேஸ் என்பவைகள். இவை பத்தொன்பது பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமாம். 39இதுவே நப்தலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்; இந்தப் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
தாணுக்கு எங்கள் பிதாவின் பங்கு
40ஏழாம் சீட்டு தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி விழுந்தது. 41அவர்களுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள் சோரா, எஸ்தாவோல், இர்செமேஸ், 42சாலாபீன், ஆயலோன், இத்லா, 43ஏலோன், திம்னா, எக்ரோன், 44எல்தேகே, கிபெத்தோன், பாலாத், 45யெகூத், பெனேபராக், காத்ரிம்மோன், 46மேயார்கோன், ரக்கோன் என்பவைகளும், யொப்பாவுக்கு எதிரான எல்லையும் அடங்கியிருந்தன. 47தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு அகன்றுபோனபோது, அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அதை வெட்டி, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியேறி, தங்கள் தகப்பனாகிய தாணுடைய பேரின்படி லேசேமுக்குத் தாண் என்று பேரிட்டார்கள். 48இதுவே தாண் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்; இந்தப் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
யோசுவாவுக்கு எங்கள் பிதாவின் ஈவு
49இஸ்ரவேலர் தேசத்தை அதின் எல்லைகளின்படி பங்கிட்டு முடித்தபின்பு, அவர்கள் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் தங்கள் நடுவே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள். 50எங்கள் பிதாவின் கட்டளையின்படி, அவர் கேட்ட பட்டணமாகிய எப்பிராயீமின் மலைநாட்டிலுள்ள திம்னாத்செராவை அவனுக்குக் கொடுத்தார்கள். அவன் அந்தப் பட்டணத்தைத் திரும்பக் கட்டி, அங்கே குடியேறினான். 51ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குரிய பிதாக்களின் வம்சத்தலைவர்களும், சீலோவிலே எங்கள் பிதாவுக்கு முன்பாக, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலண்டையிலே, சீட்டுப்போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே. இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.