பசியுள்ள ஜனக்கூட்டத்திற்கு அப்பம்
6 1 இவைகளுக்குப் பின்பு, இயேசு திபேரியாக் கடல் என்னப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்றார். 2 நோயாளிகளிடம் அவர் செய்த அடையாளங்களைக் கண்டதினால், திரளான ஜனக்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. 3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷர்களோடு உட்கார்ந்தார். 4 யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா அப்பொழுது சமீபமாயிருந்தது. 5 இயேசு கண்களை ஏறெடுத்து, திரளான ஜனக்கூட்டம் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி, “இந்த ஜனங்கள் புசிப்பதற்கு நாம் எங்கே அப்பம் வாங்கலாம்?” என்றார். 6 தாம் செய்யப்போகிறதை அவர் அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படியே இப்படிச் சொன்னார்.
7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, “அவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொள்ளுகிறதற்கு இருநூறு நாள் கூலிக்குச் சமமான அப்பங்களும் போதாதே” என்றான். a a v7 ஒரு தெனாரி ஏறக்குறைய ஒரு நாள் கூலிக்குச் சமம்; இருநூறு தெனாரி ஏறக்குறைய எட்டு மாத சம்பளத்திற்குச் சமம்.
8 அப்பொழுது அவருடைய சீஷர்களில் ஒருவனாகிய, சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரை நோக்கி, 9 “ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு சிறிய மீன்களும் வைத்திருக்கிற ஒரு சிறுவன் இங்கே இருக்கிறான்; ஆனாலும் இத்தனை பேருக்கு அவைகள் எம்மாத்திரம்?” என்றான்.
10 இயேசு, “ஜனங்களை உட்காரவையுங்கள்” என்றார். அவ்விடத்தில் மிகுதியான புல் இருந்தது; அப்பொழுது ஏறக்குறைய ஐயாயிரம்பேராகிய புருஷர்கள் உட்கார்ந்தார்கள். 11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, உட்கார்ந்திருந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்; அப்படியே மீன்களையும் அவர்கள் விரும்பினமட்டும் கொடுத்தார். 12 அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, “ஒன்றும் வீணாய்ப் போகாதபடி, மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” என்றார். 13 அப்படியே அவர்கள் சேர்த்து, சாப்பிட்டவர்கள் மீதியாக்கின ஐந்து வாற்கோதுமை அப்பங்களின் துணிக்கைகளால் பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். 14 அவர் செய்த அடையாளத்தை அந்த ஜனங்கள் கண்டு, “உலகத்தில் வரவேண்டிய தீர்க்கதரிசி மெய்யாகவே இவர்தான்” என்று சொல்லத் தொடங்கினார்கள். 15 அப்பொழுது அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படி பிடித்துக்கொள்ளப்போகிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் தனித்து மலையின்மேல் விலகிச் சென்றார்.
புயலுக்குள்
16 சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் கடலருகே இறங்கி, 17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டுப்போனார்கள். அப்பொழுது இருள் சூழ்ந்திருந்தது; இயேசுவும் அவர்களிடத்தில் இன்னும் வந்திருக்கவில்லை. 18 பலத்த காற்று அடித்ததினால் கடல் கொந்தளித்தது. 19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நான்கு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபோது, இயேசு கடலின்மேல் நடந்து படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். 20 அவரோ அவர்களை நோக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார். 21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனமகிழ்ந்தார்கள்; உடனே அவர்கள் போய்ச்சேரவேண்டிய கரையைப் படவு அடைந்தது.
22 மறுநாளிலே, கடலின் அக்கரையிலே நின்ற ஜனக்கூட்டம், அங்கே ஒரே ஒரு படவைத்தவிர வேறொன்றும் இருக்கவில்லையென்றும், அந்தப் படவில் இயேசு தம்முடைய சீஷர்களோடேகூட ஏறாமல், அவருடைய சீஷர்கள்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். 23 கர்த்தர் ஸ்தோத்திரம்பண்ணினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகே திபேரியாவிலிருந்து வேறு படவுகள் வந்தன. 24 ஆகையால், இயேசுவும் அவருடைய சீஷர்களும் அங்கே இல்லாததை ஜனக்கூட்டம் கண்டபோது, அவர்களும் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 25 கடலின் அக்கரையிலே அவரைக் கண்டபோது, “ரபீ, நீர் எப்பொழுது இங்கே வந்தீர்?” என்று அவரிடத்தில் கேட்டார்கள்.
26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினாலல்ல, அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைத்திருக்கிற போஜனத்திற்காகவே பிரயாசப்படுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரையே எங்கள் பிதா முத்திரையிட்டிருக்கிறார்” என்றார்.
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் பிதாவின் கிரியைகளை நாங்கள் செய்யவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “அவர் அனுப்பினவரிடத்தில் நீங்கள் விசுவாசமாயிருப்பதே எங்கள் பிதாவின் கிரியையாயிருக்கிறது” என்றார்.
30 அதற்கு அவர்கள், “அப்படியானால், நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கத்தக்கதாக என்ன அடையாளத்தைச் செய்கிறீர்? என்ன கிரியையை நடப்பிக்கிறீர்? 31 ‘உண்ணும்படி வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைக் கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறபடி, எங்கள் முன்னோர்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே” என்றார்கள்.
32 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மோசே அல்ல, வானத்திலிருந்து வந்த அப்பத்தை உங்களுக்குக் கொடுத்தவர்; என் பிதாவே வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 எங்கள் பிதாவின் அப்பமானது வானத்திலிருந்து இறங்கி, உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிறவரே” என்றார்.
34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, “கர்த்தாவே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்” என்றார்கள்.
35 இயேசு அவர்களை நோக்கி, “ஜீவஅப்பம் நானே; என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருபோதும் தாகமடையான். 36 ஆனாலும் நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாதிருக்கிறீர்கள். 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளிவிடேன். 38 என் சுயசித்தத்தின்படி செய்யவல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன். 39 அவர் எனக்குக் கொடுத்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. 40 குமாரனை நோக்கிப்பார்த்து அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே என் பிதாவின் சித்தம்; நானும் கடைசி நாளில் அவனை எழுப்புவேன்” என்றார்.
41 “வானத்திலிருந்து இறங்கிவந்த அப்பம் நானே” என்று அவர் சொன்னதினால், யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள். 42 “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா? இவனுடைய தகப்பனையும் தாயையும் நாம் அறியோமா? அப்படியிருக்க, ‘நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்’ என்று இவன் எப்படிச் சொல்லுகிறான்?” என்றார்கள்.
43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “உங்களுக்குள்ளே முறுமுறுக்காதிருங்கள். 44 என்னை அனுப்பின பிதாவானவர் இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்; வருகிறவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன். b b v44 இயேசுவினிடத்தில் வருவது எங்கள் பிதாவின் தொடக்கத்திலிருந்து வருகிறது — அவர் கட்டாயப்படுத்தும் வல்லமையினால் அல்ல, பின்தொடர்ந்து தேடும் அன்பினால் தம்முடைய பிள்ளைகளைக் குமாரனிடத்திற்கு இழுக்கிறார். 45 ‘அவர்கள் எல்லாரும் எங்கள் பிதாவினால் போதிக்கப்படுவார்கள்’ என்று தீர்க்கதரிசிகளின் ஆகமங்களில் எழுதியிருக்கிறது; ஆகையால், பிதாவினிடத்தில் கேட்டு, அவரிடத்திலிருந்து கற்றுக்கொள்ளுகிறவனெவனும் என்னிடத்தில் வருகிறான். 46 பிதாவினிடத்திலிருந்து வந்தவரேயன்றி வேறொருவனும் பிதாவானவரைக் கண்டதில்லை; அவரே பிதாவைக் கண்டிருக்கிறார். 47 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. 48 ஜீவஅப்பம் நானே. 49 உங்கள் முன்னோர்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தும் மரித்தார்கள். 50 வானத்திலிருந்து இறங்குகிற அப்பம் இதுவே; இதைப் புசிக்கிறவன் மரியாமலிருப்பான். 51 வானத்திலிருந்து இறங்கிவந்த ஜீவஅப்பம் நானே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்றார்.
52 அப்பொழுது யூதர்கள், “இவன் தன் மாம்சத்தை நமக்கு எப்படிப் புசிக்கக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம்பண்ணினார்கள்.
53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை. 54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். 55 என் மாம்சம் மெய்யான போஜனமாயும், என் இரத்தம் மெய்யான பானமாயும் இருக்கிறது. 56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன். 57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்து இறங்கிவந்த அப்பம் இதுவே; உங்கள் முன்னோர்கள் மன்னாவைப் புசித்தும் மரித்ததுபோல அல்ல; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” என்றார்.
59 கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்தில் அவர் உபதேசம்பண்ணுகையில் இவைகளைச் சொன்னார். 60 அவருடைய சீஷர்களில் அநேகர் இதைக் கேட்டபொழுது, “இது கடினமான உபதேசம், இதை யார் ஏற்றுக்கொள்ளக்கூடும்?” என்றார்கள்.
பலர் பின்வாங்கும்போது
61 தம்முடைய சீஷர்கள் இதைக்குறித்து முறுமுறுக்கிறதை இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி, “இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 64 ஆனாலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் இருக்கிறார்கள்” என்றார். விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் இயேசு ஆதிமுதற்கொண்டே அறிந்திருந்தார். 65 அன்றியும் அவர், “ஒருவனும் என் பிதாவினால் அருளப்பட்டாலொழிய என்னிடத்தில் வரமாட்டானென்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.
66 அதுமுதற்கொண்டு அவருடைய சீஷர்களில் அநேகர் பின்வாங்கிப்போய், அப்புறம் அவரோடேகூட நடவாதிருந்தார்கள்.
67 அப்பொழுது இயேசு பன்னிருவரை நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா?” என்றார்.
68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக, “கர்த்தாவே, யாரிடத்தில் போவோம்? நித்தியஜீவனுடைய வார்த்தைகள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் எங்கள் பிதாவின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்துமிருக்கிறோம்” என்றான். c c v69 இங்கே “தேவனுடைய” என்பது பிதாவையே சுட்டுகிறது — இயேசு எங்கள் பிதாவுக்குச் சொந்தமானவரும் அவரிடத்திலிருந்து வந்தவருமாகிய பரிசுத்தர்; பின்வாங்கிப்போன சீஷர்களுக்குப் பதிலாக பேதுரு அறிக்கையிடுகிற நாமம் இதுவே.
70 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவன் பிசாசாயிருக்கிறான்” என்றார். 71 சீமோனுடைய குமாரனாகிய யூதாஸ்காரியோத்தைக்குறித்து இப்படிச் சொன்னார்; பன்னிருவரில் ஒருவனாகிய இவனே அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன்.