என் நாட்கள் ஒரு சுவாசம் மட்டுமே
7 1“மனுஷருக்குப் பூமியில் கடினமான போராட்டம் இல்லையா? அவர்களுடைய நாட்கள் கூலிக்காரனுடைய நாட்களைப் போல் இல்லையா? 2நிழலை ஏங்கிக் காத்திருக்கும் அடிமையைப் போலவும், தன் கூலிக்குக் காத்திருக்கும் கூலிக்காரனைப் போலவும், 3வெறுமையான மாதங்கள் எனக்குப் பங்கிடப்பட்டன, துன்பமான இரவுகள் எனக்கு நியமிக்கப்பட்டன. 4நான் படுத்துக்கொள்ளும்போது, ‘நான் எப்போது எழுந்து இருப்பேன்?’ என்று சொல்லுகிறேன். ஆனால் இரவு நீண்டு செல்கிறது; விடியும்வரை நான் புரண்டு புரண்டு கிடக்கிறேன். 5என் மாம்சம் புழுக்களாலும் மண்கட்டிகளாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் இறுகி, மறுபடியும் வெடித்துப் பிளக்கிறது. 6என் நாட்கள் நெசவாளியின் நாடாவைப் பார்க்கிலும் வேகமாய் ஓடுகின்றன, நம்பிக்கையின்றி அவைகள் முடிவுக்கு வருகின்றன. 7என் ஜீவன் ஒரு சுவாசம் மட்டுமே என்று நினைத்தருளும்; இனிமேல் நான் நன்மையான எதையும் ஒருபோதும் காணமாட்டேன். 8இப்போது என்னைப் பார்க்கும் கண் இனிமேல் என்னைக் காணாது; உம்முடைய கண்கள் என்மேல் இருக்கும், ஆனால் நான் போயிருப்பேன். 9மேகம் மங்கி மறைந்துபோவதுபோல, பாதாளத்திற்கு இறங்குகிறவன் மேலே ஏறிவருவதில்லை; 10அவன் தன் வீட்டிற்கு இனி ஒருபோதும் திரும்பிவருவதில்லை, அவனுடைய இடமும் அவனை இனி அறிவதில்லை.
11“ஆகையால் நான் என் வாயை மூடிக்கொள்ளமாட்டேன்; என் ஆவியின் வேதனையிலிருந்து பேசுவேன், என் ஆத்துமாவின் கசப்பிலே முறையிடுவேன். 12நீர் என்மேல் காவல் வைப்பதற்கு, நான் கடலா, அல்லது கடல் பயங்கர மிருகமா? 13‘என் படுக்கை என்னைத் தேற்றும், என் மஞ்சம் என் முறையீட்டை ஆற்றும்’ என்று நான் சொல்லும்போது, 14அப்பொழுது நீர் சொப்பனங்களால் என்னைப் பயமுறுத்தி, தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர், 15இதனால் மூச்சடைத்து இறப்பதையே நான் தெரிந்துகொள்வேன், இந்த என் சரீரத்தைப் பார்க்கிலும். 16நான் உருகிப்போகிறேன்; நான் என்றென்றும் வாழமாட்டேன். என்னைத் தனியே விட்டுவிடும், ஏனெனில் என் நாட்கள் ஒரு சுவாசமே.
17“மனுஷன் எம்மாத்திரம், நீர் அவனை இவ்வளவாய் மதித்து, அவன்மேல் உம்முடைய மனதை வைக்கிறீர், 18காலைதோறும் அவனைச் சந்தித்து, ஒவ்வொரு நொடியிலும் அவனைச் சோதிக்கிறீர்? 19எத்தனை காலம்வரை நீர் என்னைவிட்டுக் கண்ணை விலக்காமல், என் உமிழ்நீரை விழுங்கும் நேரம்கூட என்னைத் தனியே விடாமல் இருப்பீர்? 20நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்தேன் உமக்கு, மனுக்குலத்தைக் கண்காணிக்கிறவரே? ஏன் என்னை உம்முடைய இலக்காக்கினீர், நான் எனக்கே ஒரு பாரமாய் ஆகும்படி? 21நீர் ஏன் என் பாவத்தை மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறீர்? ஏனெனில் விரைவில் நான் மண்ணிலே படுத்துக்கொள்வேன்; நீர் என்னைத் தேடுவீர், ஆனால் நான் போயிருப்பேன்.”