சுரங்கத் தொழிலாளி தோண்டி எடுக்கமுடியாதது
28 1"நிச்சயமாக வெள்ளிக்கு ஒரு சுரங்கம் உண்டு, பொன் புடமிடப்படும் இடமும் உண்டு. 2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது, செம்பு கல்லிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது. 3மனிதன் இருளுக்கு எல்லை வைக்கிறான்; இருள்சூழ்ந்த காரிருள் நிறைந்த இடங்களில் தாதுவைத் தேடி மிக ஆழத்திற்குச் சென்று தோண்டுகிறான். 4அவன் ஒரு குழியை ஆழமாய்த் தோண்டுகிறான், மனிதர் வாழும் இடத்திற்கு வெகுதூரத்தில், ஒரு கால்கூட நடந்திராத இடங்களில்; அங்கே அவர்கள் யாருமற்ற இடத்தில் வெகுதூரத்தில் தொங்கி அசைந்தாடுகிறார்கள். 5பூமி—அதிலிருந்து உணவு விளைகிறது, ஆனால் அதன் அடிப்பாகமோ நெருப்பினால் என்பதுபோல் புரட்டப்படுகிறது. 6அதன் கற்கள் நீலரத்தினங்களைக் கொண்டிருக்கின்றன, அதன் மண்ணில் பொன் உண்டு. 7அது ஒரு பாதை, எந்தக் கழுகும் அறியாதது, வல்லூறின் கண்ணும் என்றும் கண்டிராத ஒன்று. 8கர்வமுள்ள மிருகங்கள் அதில் மிதித்ததில்லை, சிங்கமும் அதன்மேல் நடமாடியதில்லை. 9மனிதன் தன் கையை கடினமான பாறையின்மேல் வைத்து, மலைகளை வேரோடு புரட்டிப்போடுகிறான். 10அவன் பாறைகளுக்குள் வழிகளை வெட்டுகிறான், அவனுடைய கண் விலையேறப்பெற்ற ஒவ்வொன்றையும் காண்கிறது. 11அவன் வடிந்தோடும் நீரோடைகளைத் தடுத்து நிறுத்தி, மறைவானவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
12"ஆனால் ஞானம்—அது எங்கே காணப்படும்? புத்தியின் இடம் எங்கே இருக்கிறது? 13அதன் மதிப்பை மனிதன் அறியான், ஜீவனுள்ளோரின் தேசத்திலும் அது காணப்படுவதில்லை. 14ஆழம், ‘அது என்னில் இல்லை’ என்கிறது, சமுத்திரமும், ‘அது என்னிடத்தில் இல்லை’ என்கிறது. 15மேன்மையான பொன்னைக் கொடுத்தும் அதை வாங்கமுடியாது, அதன் விலையை வெள்ளியால் நிறுத்துக் கொடுக்கவும் முடியாது. 16ஓப்பீரின் பொன்னால் அதன் மதிப்பை மதிக்கமுடியாது, விலையேறப்பெற்ற கோமேதகத்தாலோ நீலரத்தினத்தாலோ மதிக்கமுடியாது. 17பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா, சுத்தப் பொன்னின் பாத்திரங்களுக்காகவும் அதை மாற்றிக்கொள்ளமுடியாது. 18பவளத்தையும் பளிங்கையும் குறிப்பிடத் தேவையில்லை; ஞானத்தின் விலை மாணிக்கங்களைவிட மேலானது. 19கூஷ் தேசத்துப் புஷ்பராகம் அதற்கு நிகராகா, சுத்தப் பொன்னாலும் அதை மதிக்கமுடியாது.
20"அப்படியானால், ஞானம் எங்கிருந்து வருகிறது? புத்தியின் இடம் எங்கே இருக்கிறது? 21அது ஜீவனுள்ள யாவரின் கண்களுக்கும் மறைவாயிருக்கிறது, ஆகாயத்துப் பறவைகளுக்கும் அது மறைக்கப்பட்டிருக்கிறது. 22அழிவும் மரணமும் சொல்லுகின்றன, ‘அதைப்பற்றிய ஒரு செய்தியை எங்கள் காதுகளால் கேட்டோம்.’
23"தேவனே அதற்கான வழியை அறிந்திருக்கிறார், அதன் இடத்தையும் அவர் அறிவார். 24ஏனென்றால் அவர் பூமியின் கடையாந்தரங்கள்வரை பார்க்கிறார், வானங்களின்கீழுள்ள யாவையும் காண்கிறார். 25அவர் காற்றுக்கு அதன் நிறையைக் கொடுத்து, தண்ணீர்களை அளந்து வைத்தபோதும், 26மழைக்கு ஒரு கட்டளையையும், இடிமின்னலுக்கு ஒரு பாதையையும் ஏற்படுத்தினபோதும், 27அப்பொழுது அவர் ஞானத்தைக் கண்டு அதை அறிவித்தார்; அதை நிலைநிறுத்தி, அதை ஆராய்ந்தறிந்தார்.
28மேலும் அவர் மனுக்குலத்தை நோக்கி, ‘தேவனுக்குப் பயந்திருப்பதே ஞானம், தீமையைவிட்டு விலகுவதே புத்தி’ என்று சொன்னார்."