பாபிலோனிலிருந்து ஒரு அன்பளிப்பு
39 1அக்காலத்தில், எசேக்கியா வியாதிப்பட்டு சுகமடைந்தான் என்று கேள்விப்பட்டு, பாலதானின் குமாரனாகிய மெரொதாக் பலதான் என்னும் பாபிலோன் ராஜா, எசேக்கியாவுக்கு நிருபங்களையும் ஒரு அன்பளிப்பையும் அனுப்பினான். 2எசேக்கியா அவர்களை மகிழ்ச்சியாய் வரவேற்று, தன் பொக்கிஷ சாலையையும் வெள்ளியையும் பொன்னையும் நறுமணப் பொருள்களையும் நல்ல தைலத்தையும் தன் எல்லா ஆயுதசாலையையும் தன் களஞ்சியங்களில் இருந்த யாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான். எசேக்கியா தன் அரண்மனையிலும் தன் ராஜ்யம் முழுவதிலும் அவர்களுக்குக் காண்பியாதது ஒன்றுமில்லை. 3அப்பொழுது தீர்க்கதரிசியாகிய ஏசாயா எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து, “இந்த மனுஷர் என்ன சொன்னார்கள்? எங்கேயிருந்து உன்னிடத்தில் வந்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “தூரதேசத்திலிருந்து, பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்றான்.
4அப்பொழுது அவன், “உன் அரண்மனையில் அவர்கள் என்னத்தைக் கண்டார்கள்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “என் அரண்மனையிலிருந்த யாவையும் கண்டார்கள்; என் களஞ்சியங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாதது ஒன்றுமில்லை” என்றான்.
5அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி, “சேனைகளின் பரமபிதாவின் வார்த்தையைக் கேள்:
6இதோ, உன் அரண்மனையிலுள்ள யாவும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்துவைத்த யாவும், பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும் நாட்கள் வருகின்றன; ஒன்றும் மீதியாயிராது என்று எங்கள் பிதா சொல்லுகிறார். 7உன்னிலிருந்து பிறக்கும் உன் சொந்தக் குமாரரிலும் சிலர் எடுக்கப்பட்டு, பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாய்ச் சேவிப்பார்கள்” என்றான்.
8அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீ சொன்ன எங்கள் பிதாவின் வார்த்தை நல்லது” என்றான்; ஏனெனில், “என் வாழ்நாளில் சமாதானமும் பாதுகாப்பும் இருக்குமே” என்று அவன் எண்ணினான்.