ஏதோமின் பூர்வகால பகையைப் பிதா நியாயந்தீர்க்கிறார்
35 1எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாகி:
2மனுஷகுமாரனே, சேயீர் மலைக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல். 3அதை நோக்கிச் சொல்லவேண்டியது: ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்: “இதோ, சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்; நான் என் கையை உனக்கு எதிராக நீட்டி, உன்னைப் பாழாகவும் வெறுமையாகவும் ஆக்குவேன். 4உன் பட்டணங்களை நான் இடிபாடாக்குவேன், நீ பாழாய்ப் போவாய். அப்பொழுது நானே பிதாவானவர் என்று அறிந்துகொள்வாய்.
5நீ பூர்வகாலப் பகையை வைத்திருந்து, இஸ்ரவேல் புத்திரரை அவர்களுடைய ஆபத்தின் காலத்திலே, அவர்களுடைய கடைசி தண்டனை வந்த வேளையிலே, பட்டயத்துக்கு ஒப்புக்கொடுத்த படியினால்,” 6என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நான் உன்னை இரத்தப்பழிக்கு ஒப்புக்கொடுப்பேன், இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று ஆண்டவராகிய பிதா உரைக்கிறார். நீ இரத்தச்சிந்துதலை வெறுக்காதபடியால், இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும். 7“சேயீர் மலையை நான் பாழும் வெறுமையுமாக்கி, அதிலே போக்குவரவாய் இருக்கிற யாவரையும் அறுத்துப்போடுவேன். 8அதின் மலைகளை வெட்டுண்டவர்களால் நிரப்புவேன்; உன் குன்றுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், உன் எல்லா ஓடைகளிலும் பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் விழுவார்கள். 9உன்னை நித்திய பாழிடமாக்குவேன்; உன் பட்டணங்கள் குடியில்லாமல் கிடக்கும். அப்பொழுது நானே பிதாவானவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
10‘இந்த இரண்டு ஜாதிகளும், இந்த இரண்டு தேசங்களும் என்னுடையதாகும்; அவைகளை நாம் கைப்பற்றுவோம்’ என்று—எங்கள் பிதா அங்கே இருந்தும்—நீ சொன்னபடியால்,” 11ஆகையால், என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நீ இஸ்ரவேலை வெறுத்து காண்பித்த உன் கோபத்துக்கும் பொறாமைக்கும் தக்கதாய் நான் உனக்குச் செய்வேன்; உன்னை நான் நியாயந்தீர்க்கும்போது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னை அறியப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய பிதா உரைக்கிறார்.
12அப்பொழுது நானே பிதாவானவர் என்று அறிந்துகொள்வாய். ‘அவைகள் பாழாக்கப்பட்டன, நமக்கு விழுங்குவதற்குக் கொடுக்கப்பட்டன’ என்று இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் நீ சொன்ன உன் நிந்தைகளையெல்லாம் நான் கேட்டேன். 13நீ உன் வாயினால் எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாய் உன் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினாய்; அதை நான் கேட்டேன். 14ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்: பூமியனைத்தும் மகிழ்ச்சியாயிருக்கும்போது, நான் உன்னைப் பாழாக்குவேன். 15இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப் போனதைக்குறித்து நீ மகிழ்ந்தபடியே, நான் உனக்குச் செய்வேன். சேயீர் மலையே, ஏதோம் முழுவதுமே, நீ பாழாய்ப் போவாய். அப்பொழுது நானே பிதாவானவர் என்று அறிந்துகொள்வார்கள்.