ஒவ்வொரு ஆத்துமாவும் பிதாவானவருக்குக் கணக்குக் கொடுக்கும்
18 1எங்கள் பிதாவின் வார்த்தை எனக்கு உண்டாயிற்று:
2“இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து, ‘பெற்றோர் புளிப்பான திராட்சப்பழங்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின’ என்று நீங்கள் இந்தப் பழமொழியை ஏன் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள்?
3“நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நீங்கள் இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்லமாட்டீர்கள் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். 4‘எல்லா ஜீவன்களும் என்னுடையவைகள்; பெற்றோரின் ஜீவனும் பிள்ளையின் ஜீவனும் ஒருங்கே என்னுடையவைகள். பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும். 5நியாயமும் நீதியும் செய்கிற நீதிமான் ஒருவன் இருந்தால், 6அவன் மலைமேல் இருக்கிற மேடைகளில் புசிக்காமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் விக்கிரகங்களை நோக்கிப் பாராமலும், அவன் தன் அயலானுடைய மனைவியோடே விபசாரம் செய்யாமலும், மாதவிடாய் காலத்திலிருக்கிற ஸ்திரீயைச் சேராமலும், 7அவன் ஒருவனையும் ஒடுக்காமல், கடனுக்காக வாங்கிய அடகைத் திரும்பக் கொடுத்து, கொள்ளையிடாமல், பசியாயிருக்கிறவனுக்குத் தன் அப்பத்தைக் கொடுத்து, நிர்வாணமாயிருக்கிறவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, 8அவன் வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்தைவிட்டுத் தன் கையை விலக்கி, மனிதனுக்கும் மனிதனுக்கும் நடுவே உண்மையாய் நியாயந்தீர்த்தும், 9என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களை உண்மையாய்க் கைக்கொள்ளுகிறவனாயும் இருந்தால், அவனே நீதிமான்; அவன் நிச்சயமாய்ப் பிழைப்பான் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்.
10“இரத்தம் சிந்துகிறவனும், இவைகளில் ஒன்றைச் செய்கிறவனுமான கொடூரமான மகன் ஒருவன் அவனுக்கு இருந்தால்; 11(தகப்பன் இவைகளில் ஒன்றையும் செய்யாதிருந்தும்) அவன் மலைமேடைகளில் புசித்து, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, 12சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளையிட்டு, அடகாக வாங்கினதைத் திரும்பக் கொடாமல், விக்கிரகங்களை நோக்கிப்பார்த்து, அருவருப்பானவைகளைச் செய்து, 13அவன் வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? பிழைக்கமாட்டான்! இந்த அருவருப்பானவைகளையெல்லாம் செய்தபடியால், அவன் நிச்சயமாய் மரணமடைவான்; அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்.
14“இதோ, இவன் ஒரு மகனைப் பெற்றால், அந்த மகன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, அவைகளைக் கண்டும் அவைகளில் ஒன்றையும் செய்யாமல், 15அவன் மலைமேல் இருக்கிற மேடைகளில் புசியாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் விக்கிரகங்களை நோக்கிப் பாராமலும், தன் அயலானுடைய மனைவியோடே விபசாரம் செய்யாமலும், 16அவன் ஒருவனையும் ஒடுக்காமலும், அடகு வாங்காமலும், கொள்ளையிடாமலும், பசியாயிருக்கிறவனுக்குத் தன் அப்பத்தைக் கொடுத்து, நிர்வாணமாயிருக்கிறவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, 17அவன் அநியாயத்தைவிட்டுத் தன் கையை விலக்கி, வட்டியையும் பொலிசையையும் வாங்காமல், என் நியாயங்களைச் செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல், நிச்சயமாய்ப் பிழைப்பான்.
18“அவனுடைய தகப்பனோ, கொடுமையாய் ஒடுக்கி, தன் சகோதரனைக் கொள்ளையிட்டு, தன் ஜனத்தின் நடுவே தகாததைச் செய்தபடியினால், தன் அக்கிரமத்திலே சாவான்.
19“ஆனாலும் நீங்கள்: ‘மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்காதிருப்பானேன்?’ என்கிறீர்கள். மகன் நியாயமும் நீதியும் செய்து, என் கட்டளைகளையெல்லாம் கவனமாய்க் கைக்கொண்டானே; அவன் நிச்சயமாய்ப் பிழைப்பான். 20பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நன்மை அவன்மேல் இருக்கும், துன்மார்க்கனுடைய தீமை அவன்மேல் இருக்கும்.
21“துன்மார்க்கனோ, தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயமும் நீதியும் செய்வானாகில், அவன் சாகாமல் நிச்சயமாய்ப் பிழைப்பான். 22அவன் செய்த எல்லா மீறுதல்களும் அவனுக்கு விரோதமாய் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த நீதியினிமித்தம் பிழைப்பான். 23துன்மார்க்கனுடைய மரணத்தில் எனக்கு விருப்பம் உண்டோ? அவன் தன் வழிகளைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதே அல்லவோ எனக்கு விருப்பம் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். a a v23 எங்கள் பிதா ஒருவருடைய அழிவிலும் மகிழ்ச்சி கொள்ளுகிறதில்லை. வழிதவறிப் போனவன் திரும்பி, ஜீவனுக்கு வீடு திரும்பிவரவேண்டும் என்பதே அவருடைய ஆழமான விருப்பம்.
24“ஆனால் நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்வானாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த நீதிகளில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த துரோகத்தினிமித்தமும் அவன் செய்த பாவங்களினிமித்தமும் அவன் சாவான்.
25“ஆனாலும் நீங்கள்: ‘எங்கள் பிதாவின் வழி செம்மையானதல்ல’ என்கிறீர்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்: என் வழி செம்மையற்றதோ? உங்கள் வழிகளல்லவோ செம்மையற்றவைகள்? 26நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்து, அதிலே செத்தால், அவன் செய்த தன் அநியாயத்தினிமித்தமே சாவான். 27துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்வானாகில், அவன் தன் ஆத்துமாவை உயிரோடே காப்பாற்றுவான். 28அவன் அதைச் சிந்தித்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியால், அவன் சாகாமல் நிச்சயமாய்ப் பிழைப்பான். 29ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார்: ‘எங்கள் பிதாவின் வழி செம்மையானதல்ல’ என்கிறார்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையற்றவைகளோ? உங்கள் வழிகளல்லவோ செம்மையற்றவைகள்?
30“ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத்தக்கதாய் நியாயந்தீர்ப்பேன் என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார். மனந்திரும்புங்கள்! பாவம் உங்களுக்கு அழிவுக்கு ஏதுவாகாதபடிக்கு, உங்கள் எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள். 31நீங்கள் செய்த உங்கள் எல்லா மீறுதல்களையும் உங்களைவிட்டு எறிந்துவிட்டு, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? 32மரிக்கிறவனுடைய மரணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று ஆண்டவராகிய பிதா சொல்லுகிறார்; ஆகையால் திரும்புங்கள், பிழையுங்கள்!”