பார்வோனுக்கு முன்பாக மோசேயும் ஆரோனும்
5 1பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், “இஸ்ரவேலின் எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: வனாந்தரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனத்தைப் போகவிடு” என்றார்கள்.
2அதற்குப் பார்வோன், “நான் அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து இஸ்ரவேலைப் போகவிடும்படிக்கு தேவன் யார்? நான் தேவனை அறியேன், இஸ்ரவேலை நான் போகவிடமாட்டேன்” என்றான்.
3அதற்கு அவர்கள், “எங்கள் பிதா எங்களைச் சந்தித்தார். நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பயணம்போய் எங்கள் பிதாவுக்குப் பலியிடும்படி விடும்; இல்லாவிட்டால் அவர் கொள்ளைநோயினாலோ பட்டயத்தினாலோ எங்களை வாதிப்பார்” என்றார்கள்.
4எகிப்தின் ராஜாவோ அவர்களை நோக்கி, “மோசே, ஆரோன், நீங்கள் ஜனங்களை அவர்கள் வேலையைவிட்டு ஏன் விலக்குகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குப் போங்கள்” என்றான். 5பின்னும் பார்வோன், “இதோ, தேசத்தின் ஜனங்கள் இப்பொழுது அநேகராயிருக்கிறார்கள்; நீங்களோ அவர்களை வேலையை நிறுத்தச் செய்கிறீர்கள்” என்றான்.
6அன்றையதினமே பார்வோன் ஜனங்களை ஆளும் ஆளோட்டிகளுக்கும் அவர்கள்மேலுள்ள தலைவர்களுக்கும் கட்டளையிட்டதாவது: 7“செங்கல் அறுக்கும்படி ஜனங்களுக்கு முன்போல வைக்கோலைக் கொடாதேயுங்கள்; அவர்கள்தானே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்த்துக்கொள்ளட்டும்.
8ஆனாலும் முன்பு அவர்கள் செய்துவந்த செங்கலின் அளவையே அவர்களிடத்தில் கேளுங்கள்; அதில் ஒன்றும் குறைக்கவேண்டாம். அவர்கள் சோம்பேறிகள்; ஆகையால்தான், ‘நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். 9அந்த மனிதர்மேல் வேலையைப் பாரமாக்குங்கள்; அப்பொழுது அவர்கள் அதிலே முயற்சிசெய்து, பொய்வார்த்தைகளுக்குச் செவிகொடாதிருப்பார்கள்” என்றான்.
10அப்பொழுது ஜனங்களை ஆளும் ஆளோட்டிகளும் தலைவர்களும் புறப்பட்டுப்போய் ஜனங்களை நோக்கி, “பார்வோன் சொல்லுகிறதாவது: ‘நான் உங்களுக்கு வைக்கோல் கொடேன்.’ 11நீங்கள் போய், உங்களுக்கு வைக்கோல் எங்கே கிடைக்கிறதோ அங்கே தேடி எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை’” என்று சொன்னார்கள். 12அப்படியே ஜனங்கள் வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடியைச் சேர்க்கும்படி எகிப்து தேசமெங்கும் சிதறிப்போனார்கள். 13ஆளோட்டிகள் அவர்களை நோக்கி, “வைக்கோல் இருந்தபோது செய்ததுபோல, அன்றன்றைக்குரிய உங்கள் வேலையை முடியுங்கள்” என்று அவர்களை நெருக்கினார்கள். 14பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்திருந்த தலைவர்கள் அடிக்கப்பட்டு, “நேற்றும் இன்றும் நீங்கள் முன்போல உங்கள் செங்கல் அளவை ஏன் முடிக்கவில்லை?” என்று கேட்கப்பட்டார்கள்.
15அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் பார்வோனிடத்தில் வந்து, “உமது அடியாருக்கு ஏன் இப்படிச் செய்கிறீர்? 16உமது அடியாருக்கு வைக்கோல் கொடுக்கப்படவில்லை; ஆனாலும் ‘செங்கல் செய்யுங்கள்’ என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; இதோ, உமது அடியார் அடிக்கப்படுகிறோம், குற்றமோ உம்முடைய சொந்த ஜனங்களிடத்தில் இருக்கிறது” என்றார்கள்.
17அதற்கு அவன், “சோம்பேறிகள்! நீங்கள் சோம்பேறிகள்! ஆகையால்தான், ‘நாங்கள் போய்த் தேவனுக்குப் பலியிடுவோம்’ என்று சொல்லுகிறீர்கள். 18இப்பொழுது போய் வேலைசெய்யுங்கள்; வைக்கோல் உங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை, ஆனாலும் நீங்கள் செங்கலின் முழு அளவையும் ஒப்புவிக்கவேண்டும்” என்றான்.
19“அன்றன்றைக்குரிய உங்கள் செங்கல் அளவில் ஒன்றும் குறைக்கவேண்டாம்” என்று சொல்லப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் தாங்கள் தொல்லையில் அகப்பட்டதைக் கண்டார்கள். 20அவர்கள் பார்வோனிடத்திலிருந்து புறப்படுகையில், தங்களைச் சந்திக்கக் காத்திருந்த மோசேயையும் ஆரோனையும் கண்டு, 21அவர்களை நோக்கி, “எங்கள் பிதா உங்களைப் பார்த்து நியாயந்தீர்ப்பாராக; ஏனெனில் எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையில் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக எங்களை அருவருப்பாக்கினீர்கள்” என்றார்கள்.
22அப்பொழுது மோசே எங்கள் பிதாவினிடத்தில் திரும்பிப்போய், “என் ஆண்டவராகிய பிதாவே, இந்த ஜனங்கள்மேல் ஏன் தீங்கு வரப்பண்ணினீர்? நீர் என்னை ஏன் அனுப்பினீர்?
23நான் உம்முடைய நாமத்தில் பேசும்படி பார்வோனிடத்தில் போனதுமுதல், அவன் இந்த ஜனங்களுக்குத் தீங்குசெய்தான்; நீரோ உம்முடைய ஜனங்களை எவ்விதத்திலும் விடுவிக்கவில்லை” என்றான்.