பிதாவின் கட்டளைகள்
40 1பின்பு எங்கள் பிதா மோசேயை நோக்கி:
2"முதலாம் மாதத்தின் முதலாம் நாளில் ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தை நிறுவுவாயாக. 3அதிலே சாட்சிப் பெட்டியை வைத்து, திரையினால் பெட்டியை மறைப்பாயாக. 4மேஜையை உள்ளே கொண்டுவந்து அதன் பொருட்களை ஒழுங்குபடுத்தி, குத்துவிளக்கை உள்ளே கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்றுவாயாக. 5பொன்னினாலான தூபபீடத்தை சாட்சிப் பெட்டிக்கு முன்பாக வைத்து, வாசஸ்தலத்தின் வாசலிலே தொங்குதிரையைத் தூக்கிவைப்பாயாக. 6தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, 7ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றுவாயாக. 8சுற்றிலும் பிராகாரத்தை நிறுவி, பிராகாரத்தின் வாசலிலே தொங்குதிரையைத் தூக்கிவைப்பாயாக.
9"அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம் செய்து, அதையும் அதன் எல்லாத் தட்டுமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும். 10தகனபலிபீடத்தையும் அதன் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம் செய்து, பலிபீடத்தைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அந்தப் பலிபீடம் மகா பரிசுத்தமாயிருக்கும். 11தொட்டியையும் அதன் பாதத்தையும் அபிஷேகம் செய்து, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
12"பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலண்டையில் அழைத்துவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவுவாயாக. 13ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்துவாயாக. 14அவன் குமாரரையும் அழைத்துவந்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்துவாயாக. 15அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்கள் தகப்பனை அபிஷேகம் செய்ததுபோல அவர்களையும் அபிஷேகம் செய்வாயாக. அவர்களுடைய அபிஷேகம் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும் ஆசாரியத்துவத்தை அவர்களுக்குக் கொடுக்கும்."
16எங்கள் பிதா தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செய்தான். 17இரண்டாம் வருஷத்தின் முதலாம் மாதம், மாதத்தின் முதலாம் நாளிலே, வாசஸ்தலம் நிறுவப்பட்டது. 18மோசே வாசஸ்தலத்தை நிறுவினான்: அதன் பாதங்களை வைத்து, அதன் பலகைகளை நிறுத்தி, அதன் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதன் தூண்களை நாட்டினான். 19எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதன்மேல் மூடியை போட்டான். 20அவன் சாட்சியை எடுத்து, பெட்டிக்குள்ளே வைத்து, பெட்டியிலே தண்டுகளைப் பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைத்தான். 21எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவன் பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுவந்து, மறைவின் திரையைத் தூக்கிவைத்து, சாட்சிப் பெட்டியை மறைத்தான். 22அவன் ஆசரிப்புக் கூடாரத்தில், வாசஸ்தலத்தின் வடபுறமாக, திரைக்கு வெளியே மேஜையை வைத்து, 23எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, எங்கள் பிதாவுக்கு முன்பாக அதின்மேல் அப்பங்களை ஒழுங்காக அடுக்கிவைத்தான். 24அவன் ஆசரிப்புக் கூடாரத்தில், மேஜைக்கு எதிராக, வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கை வைத்து, 25எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, எங்கள் பிதாவுக்கு முன்பாக அகல்களை ஏற்றிவைத்தான். 26அவன் ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொன்னினாலான பீடத்தை வைத்து, 27எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அதின்மேல் நறுமணத் தூபவர்க்கத்தைக் காட்டினான். 28பின்பு அவன் வாசஸ்தலத்தின் வாசலிலே தொங்குதிரையைத் தூக்கிவைத்தான். 29எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவன் தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலண்டையில் வைத்து, அதின்மேல் தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான். 30அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுதலுக்காக அதிலே தண்ணீர் ஊற்றினான். 31அதிலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். 32எங்கள் பிதா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தை அணுகும்போதும் கழுவினார்கள். 33அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிலும் பிராகாரத்தை நிறுவி, பிராகாரத்தின் வாசலிலே தொங்குதிரையைத் தூக்கிவைத்தான். இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
அவருடைய மகிமை கூடாரத்தை நிரப்புகிறது
34அப்பொழுது மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடிற்று, எங்கள் பிதாவின் மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. 35மேகம் அதின்மேல் தங்கியிருந்தபடியாலும், எங்கள் பிதாவின் மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினபடியாலும், மோசே ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை. 36வாசஸ்தலத்தின்மேலிருந்து மேகம் எப்பொழுது எழும்பியதோ, அப்பொழுது இஸ்ரவேலர் தங்கள் பிரயாணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறப்பட்டுப் போனார்கள்; 37ஆனால் மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் அவர்கள் புறப்படாதிருந்தார்கள். 38ஏனெனில் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் தங்கள் எல்லாப் பிரயாணங்களிலும் காணும்படி, எங்கள் பிதாவின் மேகம் பகலிலே வாசஸ்தலத்தை மூடியிருந்தது, இரவிலே அதிலே அக்கினி இருந்தது.