ஆரோனும் அவனுடைய குமாரரும் சமீபமாய் அழைக்கப்படுதல்
28 1“இஸ்ரவேல் புத்திரரிலிருந்து உன் சகோதரனாகிய ஆரோனையும் அவனுடைய குமாரரையும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி உன்னிடத்தில் சேர்த்துக்கொள்: ஆரோன், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. இவர்களே ஆரோனின் குமாரர். 2உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மகிமைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணு. 3ஆரோனை எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி பிரதிஷ்டைபண்ண, அவனுடைய வஸ்திரங்களைச் செய்வதற்காக, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பியிருக்கிற திறமையுள்ள யாவரோடும் நீ பேசு. 4அவர்கள் செய்யவேண்டிய வஸ்திரங்கள் இவைகளே: மார்ப்பதக்கம், ஏபோத், அங்கி, நெய்யப்பட்ட உள்அங்கி, பாகை, கச்சை என்பவைகளே. உன் சகோதரனாகிய ஆரோனும் அவனுடைய குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, இந்தப் பரிசுத்த வஸ்திரங்களை அவர்கள் அவனுக்கு உண்டுபண்ணக்கடவர்கள். 5அவர்கள் பொன்னையும், இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல், மெல்லிய பஞ்சுநூலையும் பயன்படுத்தக்கடவர்கள்.
ஏபோத்
6“திறமையுள்ள சித்திரவேலைக்காரன் செய்யும் வேலையாக, பொன்னினாலும், இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல், திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் ஏபோத்தை உண்டுபண்ணு. 7அதன் இரண்டு ஓரங்களிலும் இணைக்கப்பட்டு, ஒன்றாய்ச் சேர்க்கப்படும் இரண்டு தோள்த்துண்டுகள் அதற்கு இருக்கவேண்டும். 8அதன்மேலிருக்கும் கச்சையும் அதற்கு ஒத்திருக்கவேண்டும்: பொன், இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல், திரித்த மெல்லிய பஞ்சுநூல் ஆகியவைகளால் ஒரே வேலையாய்ச் செய்யப்படவேண்டும். 9இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, அவைகளின்மேல் இஸ்ரவேலின் குமாரரின் நாமங்களைப் பொறி. 10அவர்கள் பிறந்த வரிசைமுறையின்படி, ஒரு கல்லில் ஆறு நாமங்களும், மற்ற இரண்டாம் கல்லில் மற்ற ஆறு நாமங்களும் பொறிக்கவேண்டும். 11இரத்தினம் தைக்கிறவன் முத்திரையைப் பொறிப்பதுபோல, இஸ்ரவேலின் குமாரரின் நாமங்களை அந்த இரண்டு கற்களிலும் பொறித்து, பின்பு அவைகளைப் பொற்குவளைகளில் பதித்துவை. 12அந்த இரண்டு கற்களையும் இஸ்ரவேலின் குமாரருக்காக ஞாபகக்கற்களாக ஏபோத்தின் தோள்த்துண்டுகளின்மேல் வை; ஆரோன் அவர்களுடைய நாமங்களை ஞாபகக்குறியாக என் சந்நிதியில் தன் இரண்டு தோள்களின்மேலும் சுமப்பான். 13பொற்குவளைகளையும், 14கயிறுகளைப்போலத் திரிக்கப்பட்ட பசும்பொன்னின் இரண்டு சங்கிலிகளையும் செய்து; திரிக்கப்பட்ட அந்தச் சங்கிலிகளைக் குவளைகளில் மாட்டு.
மார்ப்பதக்கம்
15“நியாயத்தீர்ப்பின் மார்ப்பதக்கத்தையும் திறமையான வேலையாக உண்டுபண்ணு; ஏபோத்தின் வேலையைப்போல, பொன், இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூல், திரித்த மெல்லிய பஞ்சுநூல் ஆகியவைகளால் அதைச் செய். 16அது சதுரமாகவும் இரட்டையாகவும், ஏறக்குறைய ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும். 17அதிலே நாலு வரிசைக் கற்களைப் பதி. முதலாம் வரிசை பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; 18இரண்டாம் வரிசை மரகதம், இந்திரநீலம், வச்சிரம்; 19மூன்றாம் வரிசை கெம்பு, வைடூரியம், சுகந்தி; 20நாலாம் வரிசை படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி. இவைகள் பொற்குவளைகளில் பதிக்கப்படவேண்டும். 21இஸ்ரவேலின் குமாரரின் நாமங்களின்படி பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும்—ஒவ்வொன்றும் முத்திரையைப்போல அதனதன் நாமத்தால் பொறிக்கப்பட்டு, பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் ஏற்றதாய் இருக்கவேண்டும். 22மார்ப்பதக்கத்திற்குக் கயிறுகளைப்போலத் திரிக்கப்பட்ட பசும்பொன்னின் சங்கிலிகளைச் செய். 23மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் அதன் இரண்டு ஓரங்களிலும் மாட்டு. 24பின்பு அந்த இரண்டு பொன் திரிகளையும் மார்ப்பதக்கத்தின் ஓரங்களிலிருக்கும் இரண்டு வளையங்களில் மாட்டு. 25திரிகளின் மற்ற இரண்டு நுனிகளையும் இரண்டு பொற்குவளைகளில் மாட்டி, ஏபோத்தின் தோள்த்துண்டுகளின் முன்பக்கத்தில் இணைத்துவை. 26இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை மார்ப்பதக்கத்தின் இரண்டு நுனிகளில், ஏபோத்தை நோக்கிய அதன் உட்புறத்து ஓரத்தில் வை. 27இன்னும் இரண்டு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் இரண்டு தோள்த்துண்டுகளின் முன்பக்கத்தில் தாழவும், அதன் இணைப்புக்குச் சமீபமாய், அதன் நெய்யப்பட்ட கச்சைக்கு மேலாகவும் மாட்டு. 28மார்ப்பதக்கம் ஏபோத்தின் நெய்யப்பட்ட கச்சையின்மேல் நிலைத்திருந்து, ஏபோத்திலிருந்து விலகிப்போகாதபடிக்கு, அதன் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடே ஓர் இளநீல திரியினால் கட்டவேண்டும். 29ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேலின் குமாரரின் நாமங்களை நியாயத்தீர்ப்பின் மார்ப்பதக்கத்தில் தன் இருதயத்தின்மேல், என் சந்நிதியில் நித்திய ஞாபகக்குறியாகச் சுமப்பான். 30ஊரீம் தும்மீம் என்பவைகளை நியாயத்தீர்ப்பின் மார்ப்பதக்கத்தில் வை; அப்பொழுது ஆரோன் என் சந்நிதியில் வரும்போது அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும். ஆரோன் இஸ்ரவேலின் குமாரரின் நியாயத்தீர்ப்பை என் சந்நிதியில் தன் இருதயத்தின்மேல் எப்பொழுதும் சுமப்பான். a a v30 ஊரீம் தும்மீமென்பவைகள் தமது ஜனத்திற்காக எங்கள் பிதாவின் தீர்மானங்களை அறிந்துகொள்ளும்படி பிரதான ஆசாரியன் மார்ப்பதக்கத்தில் சுமந்துவந்த பரிசுத்த பொருள்களாயிருந்தன.
அங்கியும் பொற்பட்டமும்
31“ஏபோத்தின் அங்கியை முழுவதும் இளநீலநூலினால் உண்டுபண்ணு. 32அதின் நடுவில் தலை நுழையும்படி ஒரு துவாரம் இருக்கவேண்டும்; அது கிழியாதபடிக்கு, மார்க்கவசத்தின் கழுத்துப்பட்டையைப்போல, சுற்றிலும் நெய்யப்பட்ட ஓரம் அதற்கு இருக்கவேண்டும். 33அதின் விளிம்பைச் சுற்றிலும் இளநீலநூல், இரத்தாம்பரநூல், சிவப்புநூலினால் மாதளம்பழங்களையும், அவைகளின் இடையிடையே பொன் மணிகளையும் செய். 34பொன் மணியும் மாதளம்பழமும், பொன் மணியும் மாதளம்பழமுமாய், அங்கியின் விளிம்பைச் சுற்றிலும் இருக்கவேண்டும். 35ஆரோன் ஊழியம் செய்யும்போது அதை அணிந்திருக்கவேண்டும். அவன் என் சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போதும் புறப்படும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்.
36“பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைச் செய்து, முத்திரை பொறிப்பதுபோல அதிலே: ‘பிதாவுக்குப் பரிசுத்தம்’ என்று பொறி. 37அதை ஓர் இளநீல திரியினால் பாகையிலே, பாகையின் முன்பக்கத்தில் மாட்டு. 38அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருக்கும்; இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் பிரதிஷ்டைபண்ணும் பரிசுத்த வஸ்துக்களின் அக்கிரமத்தை அவன் சுமப்பான். அவைகள் என் சந்நிதியில் அங்கீகரிக்கப்படும்படிக்கு, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும். 39மெல்லிய பஞ்சுநூலினால் உள்அங்கியை நெய்து, மெல்லிய பஞ்சுநூலினால் பாகையைச் செய்து, சித்திரத்தையல் வேலையாகக் கச்சையையும் செய். 40ஆரோனுடைய குமாரருக்கும் மகிமைக்காகவும் அலங்காரத்திற்காகவும் உள்அங்கிகளையும், கச்சைகளையும், குல்லாக்களையும் செய். 41அவைகளை உன் சகோதரனாகிய ஆரோனுக்கும் அவனோடேகூட அவனுடைய குமாரருக்கும் உடுத்தி, அவர்களை எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்து. 42அவர்களுடைய நிர்வாணமான மாம்சத்தை மூடும்படி, இடுப்புமுதல் தொடைமட்டும் எட்டுகிற சணல்நூல் உள்ளாடைகளை அவர்களுக்குச் செய். 43ஆரோனும் அவனுடைய குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதாவது, பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம்செய்ய பலிபீடத்தண்டையில் சேரும்போதாவது, அவர்கள் அக்கிரமத்தைச் சுமந்து சாகாதபடிக்கு, அவைகளை அணிந்திருக்கவேண்டும். இது அவனுக்கும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிக்கும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.”