இன்னும் ஒரு வாதை
11 1எங்கள் பிதா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையை நான் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன். அதற்குப்பின், அவன் உங்களை இவ்விடத்திலிருந்து அனுப்பிவிடுவான்; அப்படி அனுப்பிவிடும்போது, உங்களை முழுவதுமாய்த் துரத்திவிடுவான். 2ஜனங்களிடத்தில் சொல்: ஒவ்வொரு புருஷனும் தன் அயலானிடத்திலும், ஒவ்வொரு ஸ்திரீயும் தன் அயலாளிடத்திலும், வெள்ளியும் பொன்னுமான பொருள்களைக் கேட்கக்கடவர்கள்” என்றார்.
3எங்கள் பிதா அந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணினார். மேலும், மோசே என்பவன் எகிப்து தேசத்தில், பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வையிலும் ஜனங்களின் பார்வையிலும் மிகவும் பெரியவனாயிருந்தான்.
4மோசே சொன்னது: “எங்கள் பிதா சொல்லுகிறது என்னவென்றால்: நள்ளிரவளவில் நான் எகிப்தின் நடுவே கடந்துபோவேன்,
5எகிப்து தேசத்திலுள்ள முதற்பேறான யாவும் மரிக்கும்; சிங்காசனத்தில் வீற்றிருக்கிற பார்வோனுடைய முதற்பேறு தொடங்கி, ஏந்திரம் அரைக்கிற அடிமைப்பெண்ணின் முதற்பேறுவரைக்கும், மிருகங்களின் முதற்பேறு யாவும் மரிக்கும். 6முன்பு ஒருபோதும் உண்டாகாததும், இனி ஒருபோதும் உண்டாகாததுமான மகா பெரிய கூக்குரல் எகிப்து தேசம் முழுவதிலும் உண்டாகும். 7ஆனாலும், இஸ்ரவேல் ஜனங்களில் மனிதர்மேலாகிலும் மிருகங்கள்மேலாகிலும் ஒரு நாய்முதலாய் நாக்கை அசைக்காது; இதனால் எங்கள் பிதா எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் வித்தியாசம்பண்ணுகிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 8உன்னுடைய இந்த ஊழியக்காரர் எல்லாரும் என்னிடத்தில் இறங்கிவந்து, எனக்கு முன்பாகப் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிற ஜனங்கள் அனைவரும் புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லுவார்கள்; அதற்குப்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி, மோசே கடுங்கோபமாய்ப் பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
9எங்கள் பிதா மோசேயை நோக்கி: “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; இதனால் என்னுடைய அற்புதங்கள் எகிப்து தேசத்தில் பெருகும்” என்றார்.
10மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள்; ஆனாலும் எங்கள் பிதா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிட மனதில்லாதிருந்தான்.