திருப்தியே இல்லை
6 1சூரியனுக்குக் கீழே நான் கண்ட ஒரு தீமை உண்டு; அது மனுக்குலத்தின்மேல் பாரமாய் இருக்கிறது: 2தேவன் ஒருவனுக்குச் செல்வத்தையும், ஐசுவரியத்தையும், மகிமையையும் கொடுக்கிறார்; அவன் ஆத்துமா ஆசைப்படுகிற எதற்கும் அவனுக்குக் குறைவில்லை; ஆனாலும் அதிலிருந்து அனுபவிக்க தேவன் அவனை விடுவதில்லை; அதற்குப் பதிலாக அந்நியன் ஒருவன் அதை அனுபவிக்கிறான். இது நிலையற்றது, மிகவும் துயரமான வியாதி.
3ஒரு மனுஷன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேக வருடங்கள் வாழ்ந்து—அவன் ஆயுசு எவ்வளவு நீண்டதாயிருந்தாலும்—அவன் ஆத்துமா நன்மைகளால் திருப்தியடையாமலும், அவனுக்கு அடக்கம்கூட நடக்காமலும் போனால், அவனைவிட ஒரு செத்துப்பிறந்த சிசு நலமுள்ளது என்று நான் சொல்லுகிறேன். 4அது புகையாய் வந்து இருளுக்குள் போகிறது; அதின் பெயரை இருள் மூடுகிறது. 5அது சூரியனைக் காணாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலும், அந்த மனுஷனைவிட அதற்கு அதிக இளைப்பாறுதல் உண்டு. 6அவன் ஆயிரம் வருடங்கள் இரண்டு தரம் வாழ்ந்தாலும், நன்மையை ஒருபோதும் அனுபவியாமற்போனால், எல்லோரும் ஒரே இடத்திற்குத் தானே போகிறார்கள்? 7மனுஷனுடைய எல்லாப் பிரயாசமும் அவன் வாய்க்காகவே, ஆயினும் அவன் பசி ஒருபோதும் திருப்தியடைவதில்லை. 8மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு என்ன மேன்மை? பிறருக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அறிந்திருப்பதால் தரித்திரனுக்கு என்ன லாபம்? 9ஆசை அலைந்துதிரிவதைப்பார்க்கிலும் கண்கள் காண்பது நலம். இதுவும் நிலையற்றது, காற்றைப் பிடிக்கும் முயற்சியே. 10இருக்கிறது எதுவோ அது ஏற்கெனவே பெயரிடப்பட்டது, மனுஷன் என்னவாயிருக்கிறான் என்பதும் அறியப்பட்டது; தன்னைவிட வல்லவரோடு அவன் வழக்காடக்கூடாது.
11வார்த்தைகள் அதிகமாகும்போது, எல்லாம் இன்னும் அதிக நிலையற்றதாகிறது; அதனால் மனுஷனுக்கு என்ன பிரயோஜனம்? 12நிழலைப்போல் கடந்துபோகிற தன் நிலையற்ற ஜீவனுடைய சில நாட்களில் மனுஷனுக்கு எது நன்மை என்று அறிபவன் யார்? சூரியனுக்குக் கீழே தனக்குப்பின் என்ன நடக்கும் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்?