பவுல் அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக நிற்கிறான்
26 1அகிரிப்பா பவுலை நோக்கி, “நீ உனக்காகப் பேசலாம்” என்றான். அப்பொழுது பவுல் தன் கையை நீட்டி, தன் நியாயத்தை விவரிக்கத் தொடங்கினான்.
2அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்தும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் இன்று உமக்கு முன்பாக என்னைப் பற்றி நான் பேசுவதை நான் என் பாக்கியமாக எண்ணுகிறேன்; 3விசேஷமாக, யூதருடைய எல்லா வழக்கங்களையும் தர்க்கங்களையும் நீர் நன்றாய் அறிந்திருப்பதால், பொறுமையோடு எனக்குச் செவிகொடுக்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
4என் இளவயது முதற்கொண்டு தொடக்கத்திலிருந்தே என் சொந்த ஜாதியாருக்குள்ளும் எருசலேமிலும் நான் நடத்திய வாழ்க்கையை யூதர் அனைவரும் அறிவார்கள். 5அவர்கள் நெடுங்காலமாய் என்னை அறிந்திருக்கிறார்கள்; சாட்சி சொல்ல மனதுண்டானால், நம்முடைய மார்க்கத்தின் மிகவும் கண்டிப்பான பிரிவின்படி நான் பரிசேயனாய் வாழ்ந்தேன் என்று சொல்லுவார்கள். 6இப்பொழுது, எங்கள் பிதா நம்முடைய பிதாக்களுக்குப் பண்ணின வாக்குத்தத்தத்தின்மேலுள்ள நம்பிக்கைக்காகவே நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன். 7நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் இரவும் பகலும் ஊக்கத்தோடு அவரைத் தொழுதுகொண்டு, இந்த வாக்குத்தத்தத்தை அடையும்படி நம்பிக்கை வைக்கிறார்கள். ராஜாவே, இந்த நம்பிக்கைக்காகவே யூதர்களால் நான் குற்றஞ்சாட்டப்படுகிறேன். 8எங்கள் பிதா மரித்தோரை எழுப்புகிறார் என்பது உங்களில் யாருக்காவது நம்பமுடியாத காரியமாய்த் தோன்றுவது ஏன்?
9நசரேயனாகிய இயேசுவின் நாமத்துக்கு விரோதமாக அநேக காரியங்களைச் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன். 10எருசலேமிலே அப்படியே நடந்துகொண்டேன்; பிரதான ஆசாரியர்களிடத்திலிருந்து அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்பட்டபோது அவர்களுக்கு விரோதமாய் நான் சம்மதம் கொடுத்தேன். 11எல்லா ஜெப ஆலயங்களிலும் நான் அடிக்கடி அவர்களைத் தண்டித்து, தேவனுக்கு விரோதமாய்ப் பேசும்படி அவர்களைக் கட்டாயப்படுத்த முயன்றேன்; அவர்கள்மேல் மூர்க்கங்கொண்டு, அன்னிய பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
12இப்படிப்பட்ட ஒரு பயணத்தில், பிரதான ஆசாரியர்களிடத்திலிருந்து அதிகாரமும் ஆணையும் பெற்று தமஸ்குவுக்குப் போனேன். 13ராஜாவே, மத்தியான வேளையில், சூரியனைப் பார்க்கிலும் பிரகாசமான ஒரு ஒளியை வானத்திலிருந்து வழியில் கண்டேன்; அது என்னையும் என்னோடு பயணம் பண்ணினவர்களையும் சூழ்ந்து ஒளிர்ந்தது.
14நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம்; அப்பொழுது, ‘சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்று எபிரெய பாஷையிலே என்னிடம் பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். a a v14 “முள்ளில் உதைக்கிறது” என்பது, உழவனின் கூர்முள் கோலுக்கு எதிராகப் போராடும் பிடிவாதமுள்ள எருதைக் குறிக்கும் வழக்கமான ஒரு பழமொழி — எதிர்த்து உதைத்தால் உன்னையே காயப்படுத்திக்கொள்வாய்.
15அதற்கு நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்றேன். கர்த்தர், ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16ஆனாலும் எழுந்திரு, உன் கால்களை ஊன்றி நில்; உன்னை ஒரு ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்தும்படியே நான் உனக்குக் காணப்பட்டேன்; நீ என்னைக்குறித்துக் கண்டவைகளுக்கும், இனிமேல் நான் உனக்குக் காண்பிக்கப்போகிறவைகளுக்கும் நீ சாட்சியாயிருப்பாய். 17உன் சொந்த ஜனத்தினின்றும், புறஜாதியாரிடத்திலிருந்தும் உன்னைத் தப்புவிப்பேன்; அவர்களிடத்திற்கே நான் உன்னை அனுப்புகிறேன்; 18அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு எங்கள் பிதாவினிடத்திற்கும் திரும்பும்படிக்கும், பாவமன்னிப்பையும் என்னிடத்தில் வைக்கும் விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குள் ஒரு சுதந்தரத்தையும் அடையும்படிக்கும், அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.
19ஆகையால், அகிரிப்பா ராஜாவே, பரலோகத்திலிருந்து உண்டான அந்தத் தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை; 20முதலாவது தமஸ்குவிலும், பின்பு எருசலேமிலும், யூதேயா தேசம் முழுவதிலும், அதன்பின் புறஜாதியாருக்கும், மனந்திரும்பி எங்கள் பிதாவினிடத்தில் திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவேண்டுமென்று அறிவித்தேன். 21இதின்நிமித்தமே யூதர்கள் தேவாலயத்தில் என்னைப் பிடித்து, என்னைக் கொலைசெய்ய முயன்றார்கள். 22ஆகிலும் எங்கள் பிதாவின் உதவியைப் பெற்று, இந்நாள்வரைக்கும் நான் நிலைத்திருந்து, சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி சொல்லிவருகிறேன்; தீர்க்கதரிசிகளும் மோசேயும் நடக்கும் என்று சொன்னவைகளையேயன்றி வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை; 23அதாவது, கிறிஸ்து பாடுபடவேண்டும் என்றும், மரித்தோரிலிருந்து முதலாவது எழுந்து, நம்முடைய ஜனத்துக்கும் புறஜாதியாருக்கும் ஒளியை அறிவிப்பார் என்றும் சொன்னதையே சொல்லுகிறேன்.
24பவுல் இப்படித் தன் நியாயத்தை விவரிக்கையில், பெஸ்து உரத்த சத்தமாய், “பவுலே, நீ பயித்தியக்காரன்; உன்னுடைய மிகுந்த கல்வி உன்னைப் பயித்தியனாக்குகிறது” என்றான்.
25அதற்குப் பவுல், “கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல; சத்தியமும் நல்லறிவும் நிறைந்த வார்த்தைகளையே பேசுகிறேன். 26இந்தக் காரியங்களை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் அவரோடே தாராளமாய்ப் பேசுகிறேன். இவைகளில் ஒன்றும் அவரது கவனத்திற்குத் தப்பவில்லை என்று நிச்சயித்திருக்கிறேன்; ஏனெனில் இது ஒரு மூலையில் நடந்த காரியமல்ல. 27அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீர் என்று அறிவேன்” என்றான்.
28அதற்கு அகிரிப்பா, “நான் கிறிஸ்தவனாகும்படி இத்தனை சீக்கிரத்தில் என்னைச் சம்மதிக்கவைக்கிறாயே” என்றான்.
29பவுல், “குறுகிய காலமானாலும் நீண்ட காலமானாலும், நீர் மாத்திரமல்ல, இன்று எனக்குச் செவிகொடுக்கிற எல்லாரும் இந்தக் கட்டுகள்தவிர மற்றெல்லாவற்றிலும் என்னைப்போலாகவேண்டும் என்று எங்கள் பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்றான்.
30அப்பொழுது ராஜாவும், தேசாதிபதியும், பெர்னீக்கேயாளும், அவர்களோடே உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்திருந்தார்கள்.
31அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, “இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுக்காவது தகுதியான எதையும் செய்யவில்லை” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
32அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “இந்த மனுஷன் இராயனை முறையிடாதிருந்தால், இவனை விடுதலையாக்கியிருக்கலாம்” என்றான்.