ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக பவுல்
23 1பவுல் ஆலோசனைச் சங்கத்தை உற்றுப்பார்த்து, “சகோதரரே, இந்நாள்வரை நான் எங்கள் பிதாவுக்கு முன்பாக முற்றிலும் நல்மனச்சாட்சியோடே வாழ்ந்து வந்திருக்கிறேன்” என்றான்.
2பிரதான ஆசாரியனாகிய அனனியா, பவுலின் வாயில் அறையும்படி அவனருகே நின்றவர்களுக்குக் கட்டளையிட்டான்.
3அப்பொழுது பவுல் அவனை நோக்கி, “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, எங்கள் பிதா உன்னை அறைவார்! நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயந்தீர்க்க நீ அங்கே உட்கார்ந்திருக்கிறாய்; ஆனாலும் என்னை அறையும்படி கட்டளையிட்டு நியாயப்பிரமாணத்தை மீறுகிறாயே?” என்றான்.
4அருகே நின்றவர்கள், “எங்கள் பிதாவின் பிரதான ஆசாரியனை நிந்திக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
5அதற்குப் பவுல், “சகோதரரே, இவன் பிரதான ஆசாரியன் என்று நான் அறியேன்; ஏனெனில், ‘உன் ஜனத்தின் அதிபதியைக் குறித்துத் தீங்காய்ப் பேசாதே’ என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே” என்றான்.
6அவர்களில் ஒரு பங்கினர் சதுசேயர் என்றும், மற்றொரு பங்கினர் பரிசேயர் என்றும் அறிந்த பவுல், ஆலோசனைச் சங்கத்தில், “சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயருடைய மகன். மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கையின்பொருட்டே நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்!” என்று சத்தமிட்டான்.
7இதை அவன் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி, சபை பிரிந்துபோயிற்று. 8ஏனெனில், உயிர்த்தெழுதல் இல்லை என்றும், தூதனும் ஆவியும் இல்லை என்றும் சதுசேயர் சொல்லுகிறார்கள்; பரிசேயரோ இவை எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். 9பேரிரைச்சல் உண்டாயிற்று. பரிசேயர் பக்கத்திலிருந்த சில வேதபாரகர் எழுந்து கடுமையாக வாதாடி, “இந்த மனிதனிடத்தில் நாங்கள் தவறு எதையும் காணோம். ஒரு ஆவியாவது ஒரு தூதனாவது அவனிடம் பேசியிருந்தால் என்ன?” என்றார்கள். 10வாக்குவாதம் மிகக் கடுமையாகவே, பவுல் அவர்களால் பீறுண்டு போவானோ என்று பயந்து, சேர்வைக்காரர் இறங்கிச்சென்று அவனை அவர்கள் நடுவிலிருந்து பிடித்து, கோட்டைக்குள் கொண்டுவரும்படி படைத்தலைவன் கட்டளையிட்டான்.
11மறுநாள் இரவில் நம்முடைய கர்த்தராகிய இயேசு அவன் அருகே நின்று, “திடன்கொள்! எருசலேமில் என்னைக்குறித்து நீ சாட்சி கொடுத்ததுபோல, ரோமாபுரியிலும் நீ சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
பவுலின் உயிருக்கு எதிரான சதி
12பொழுதுவிடிந்தபோது, யூதர் சதிசெய்து, பவுலைக் கொல்லும்வரை புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லை என்று ஆணையிட்டுக்கொண்டார்கள். 13இந்தச் சதியில் சேர்ந்துகொண்டவர்கள் நாற்பது பேருக்கு மேலிருந்தார்கள். 14அவர்கள் பிரதான ஆசாரியரிடத்திலும் மூப்பரிடத்திலும் போய், “பவுலைக் கொல்லும்வரை யாதொன்றையும் ருசிபார்ப்பதில்லை என்று கடினமான ஆணையிட்டு நம்மைக் கட்டிக்கொண்டோம். 15ஆகையால், அவனுடைய காரியத்தை இன்னும் திட்டமாய் விசாரிக்கப்போகிறவர்கள்போல, நீங்களும் ஆலோசனைச் சங்கமும் அவனை உங்களிடத்தில் கொண்டுவரும்படி படைத்தலைவனிடம் கேளுங்கள். அவன் வருமுன்னே அவனைக் கொல்ல நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்” என்றார்கள்.
16ஆனால் பவுலின் சகோதரியின் மகன் இந்தச் சதியைக் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் போய் நுழைந்து, பவுலுக்கு அறிவித்தான். 17அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, “இந்த வாலிபனைப் படைத்தலைவனிடத்தில் கொண்டுபோ; இவன் அவருக்கு அறிவிக்கவேண்டியது ஒன்று உண்டு” என்றான்.
18அவன் அவனைப் படைத்தலைவனிடத்தில் கொண்டுபோய், “காவலில் இருக்கிற பவுல் என்னை அழைத்து, உம்மிடத்தில் அறிவிக்கவேண்டியது ஒன்று உள்ள இந்த வாலிபனை உம்மிடம் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டான்” என்றான்.
19படைத்தலைவன் அவன் கையைப் பிடித்து, தனியே ஒருபுறமாய் அழைத்துச்சென்று, “நீ எனக்கு அறிவிக்கவேண்டியது என்ன?” என்று கேட்டான்.
20அதற்கு அவன், “பவுலைக் குறித்து இன்னும் திட்டமாய் விசாரிக்கப்போகிறதுபோல, நாளை அவனை ஆலோசனைச் சங்கத்திற்கு அழைத்துவரும்படி உம்மைக் கேட்டுக்கொள்ள யூதர் தீர்மானித்திருக்கிறார்கள். 21நீர் அவர்களுக்குச் செவிகொடாதேயும்; ஏனெனில் அவர்களில் நாற்பது பேருக்கு மேற்பட்டவர்கள் அவனுக்காகப் பதிவிருந்து காத்திருக்கிறார்கள். அவனைக் கொல்லும்வரை புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லை என்று ஆணையிட்டுக்கொண்டு, இப்பொழுது உம்முடைய சம்மதத்தை எதிர்பார்த்து ஆயத்தமாயிருக்கிறார்கள்” என்றான்.
22அப்பொழுது படைத்தலைவன், “நீ இதை எனக்கு அறிவித்ததை ஒருவருக்கும் சொல்லாதே” என்று கட்டளையிட்டு, அந்த வாலிபனை அனுப்பிவிட்டான்.
தம் சாட்சியைப் பிதா காக்கிறார்
23பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டு பேரை அழைத்து, “இன்று இரவு ஒன்பதாம் மணிநேரத்திற்குள் செசரியா பட்டணத்திற்குப் போகும்படி இருநூறு போர்ச்சேவகரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும் ஆயத்தப்படுத்துங்கள்” என்றான். 24பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸிடத்தில் பத்திரமாய்க் கொண்டுசேர்க்கும்படி வாகனங்களை ஆயத்தப்படுத்தச் சொன்னான். 25மேலும் அவன் பின்வருமாறு ஒரு நிருபத்தையும் எழுதினான்:
26“கிலவுதியுஸ் லீசியா என்பவன், கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸுக்கு வாழ்த்துதல்.
27இந்த மனிதனை யூதர் பிடித்து, கொலைசெய்யப்போகையில், இவன் ஒரு ரோமன் என்று அறிந்து, நான் என் சேவகரோடு போய் இவனைத் தப்புவித்தேன். 28அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை அறியவிரும்பி, இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டுபோனேன். 29அப்பொழுது அவர்களுடைய நியாயப்பிரமாணத்துக்குரிய தர்க்கங்களைக் குறித்து இவன்மேல் குற்றஞ்சாட்டப்பட்டதைத்தவிர, மரணத்துக்காவது கட்டுண்டிருப்பதற்காவது தகுந்த குற்றம் ஒன்றையும் இவனிடத்தில் நான் காணவில்லை. 30இந்த மனிதனுக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட சதியைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டவுடனே, இவனை உம்மிடத்தில் அனுப்பினேன்; இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் உமக்கு முன்பாக இவனுக்கு விரோதமாய்ச் சொல்லும்படி கட்டளையிட்டேன். வாழ்க” என்று எழுதினான்.
31அப்படியே போர்ச்சேவகர், தங்களுக்குக் கட்டளையிடப்பட்டபடி பவுலைக் கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி பட்டணத்திற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். 32மறுநாள் குதிரைவீரரை அவனோடே போகவிட்டு, மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். 33அந்தக் குதிரைவீரர் செசரியாவுக்குப் போய், நிருபத்தைத் தேசாதிபதியிடத்தில் ஒப்புவித்து, பவுலையும் அவனுக்கு முன்பாக நிறுத்தினார்கள். 34தேசாதிபதி அதை வாசித்து, இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று விசாரித்து, சிலிசியா நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிந்து, 35“உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் வந்தபின்பு உன் காரியத்தைக் கேட்பேன்” என்று சொல்லி, ஏரோதுவின் அரமனையில் அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.