எங்கள் பிதா அகசியாவின் தீய ஆட்சியை வீழ்த்துகிறார்
22 1எருசலேமின் மக்கள் அவனுடைய இளைய மகனாகிய அகசியாவை அவனுக்குப் பதிலாக ராஜாவாக்கினார்கள்; ஏனெனில் அரபியரோடு பாளயத்திற்குள் வந்த கொள்ளையர் மூத்த மகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டிருந்தார்கள். இப்படியாக யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான். 2அகசியா இருபத்திரண்டு வயதில் ராஜாவாகி, எருசலேமில் ஒரு வருஷம் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்; இவள் உம்ரியின் பேத்தி. 3அவனும் ஆகாபின் குடும்பத்தின் வழிகளில் நடந்தான்; ஏனெனில் அவனுடைய தாய் அவனைத் தீமைசெய்யும்படி ஆலோசனை சொன்னாள். 4ஆகாபின் குடும்பத்தைப்போல அவன் எங்கள் பிதாவின் பார்வையில் தீமைசெய்தான்; அவனுடைய தகப்பன் மரித்தபின், அவனுடைய கேட்டிற்கு ஏதுவாக அவர்கள் அவனுக்கு ஆலோசனைக்காரராயிருந்தார்கள். 5அவன் அவர்களுடைய ஆலோசனையின்படியும் நடந்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமோடு சேர்ந்து, சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ண ராமோத் கீலேயாத்திற்குப் போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். 6சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில் ராமாவிலே தனக்கு உண்டான காயங்களினின்று சொஸ்தமடையும்படி அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பிப்போனான். யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்தபடியால், அவனைப் பார்க்க யெஸ்ரயேலுக்குப் போனான்.
7அகசியா யோராமைச் சந்திக்கப் போனதினால் உண்டான அவனுடைய அழிவு எங்கள் பிதாவினால் வந்தது. அவன் வந்தபோது, ஆகாபின் குடும்பத்தை அழிக்கும்படி எங்கள் பிதா அபிஷேகம்பண்ணின நிம்சியின் மகன் யெகூவுக்கு விரோதமாக யோராமோடு புறப்பட்டுப்போனான். 8யெகூ ஆகாபின் குடும்பத்திற்கு நியாயத்தீர்ப்பைச் செலுத்துகையில், யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுக்குப் பணிவிடைசெய்த அகசியாவின் சகோதரர் மகன்களையும் கண்டுபிடித்து, அவர்களைக் கொன்றுபோட்டான். 9பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; அவன் சமாரியாவில் ஒளிந்திருக்கையில் பிடிபட்டான். அவர்கள் அவனை யெகூவினிடத்தில் கொண்டுவந்து, கொன்றுபோட்டு, “இவன் தன் முழு இருதயத்தோடும் எங்கள் பிதாவைத் தேடின யோசபாத்தின் மகன்” என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள். இப்படியாக அகசியாவின் குடும்பத்தில் ராஜ்யத்தைத் தாங்கத்தக்க பலமுள்ளவன் ஒருவனும் இல்லாமற்போனான்.
எங்கள் பிதாவின் ஆலயத்தில் மறைக்கப்பட்ட ஒரு பிள்ளை
10அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் மரித்துப்போனதைக் கண்டபோது, யூதாவின் குடும்பத்தின் ராஜவம்சத்தார் அனைவரையும் அழிக்கத் தொடங்கினாள். 11ஆனாலும் ராஜாவின் மகளாகிய யோசபியாத், கொலைசெய்யப்படப்போகிற ராஜகுமாரர் நடுவிலிருந்து அகசியாவின் மகனாகிய யோவாசைத் திருட்டளவாய் எடுத்துக்கொண்டு, அவனையும் அவனுடைய தாதியையும் படுக்கையறையிலே ஒளித்துவைத்தாள். இப்படியாக ராஜாவாகிய யோராமின் மகளும், ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவியும், அகசியாவின் சகோதரியுமாகிய யோசபியாத் அவனை அத்தாலியாளுக்கு மறைத்துவைத்ததினால், அவள் அவனைக் கொல்லவில்லை. 12அத்தாலியாள் தேசத்தை அரசாண்டுவந்த ஆறு வருஷம் அவன் எங்கள் பிதாவின் ஆலயத்திலே அவர்களோடே மறைந்திருந்தான்.