தேவனுடைய ஆலயத்திற்காக லேவியரை தாவீது ஒழுங்குபடுத்துதல்
23 1தாவீது வயது முதிர்ந்து அநேக வருடங்கள் வாழ்ந்திருந்தபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். 2அவன் இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவரையும், ஆசாரியர்களையும், லேவியரையும் ஒன்றாய்க் கூட்டினான். 3முப்பது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள லேவியர் எண்ணப்பட்டார்கள்; அவர்களுடைய மொத்த எண்ணிக்கை 38,000 பேராயிருந்தது. 4இவர்களில், எங்கள் பிதாவின் ஆலயத்தின் வேலையை மேற்பார்வையிட 24,000 பேரும்; 6,000 பேர் அதிகாரிகளும் நியாயாதிபதிகளுமாயிருந்தார்கள். 54,000 பேர் வாசல் காவலாளர்களும், 4,000 பேர் துதிசெய்வதற்காக தாவீது செய்த வாத்தியங்களால் எங்கள் பிதாவைத் துதித்தார்கள்.
6தாவீது அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுக்கேற்ப பிரிவுகளாகப் பிரித்தான்.
கெர்சோனின் வம்சங்கள்
7கெர்சோனியரில்: லாதானும் சிமெயியும். 8லாதானின் குமாரர்: தலைவனாகிய யெகியேல், பின்பு சேத்தாம், யோவேல் ஆகிய மூன்று பேர். 9சிமெயியின் குமாரர்: செலோமோத், அசியேல், ஆரான் ஆகிய மூன்று பேர். இவர்கள் லாதானின் வம்சத் தலைவர்களாயிருந்தார்கள். 10சிமெயியின் குமாரர்: யாகாத், சீனா, யெகூஷ், பெரியா என்பவர்களே. இந்த நான்கு பேரும் சிமெயியின் குமாரர். 11யாகாத் தலைவனும், சீசா இரண்டாவதுமாயிருந்தான்; யெகூஷுக்கும் பெரியாவுக்கும் குமாரர் சிலரே இருந்தபடியால், அவர்கள் ஒரே வம்சமாக, ஒரே பணிக்குழுவாக ஒன்றாய் எண்ணப்பட்டார்கள்.
கோகாத்தின் வம்சங்கள்
12கோகாத்தின் குமாரர்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகிய நான்கு பேர். 13அம்ராமின் குமாரர்: ஆரோனும் மோசேயும். மகா பரிசுத்தமான பொருட்களைப் பரிசுத்தப்படுத்தும்படிக்கும், எங்கள் பிதாவின் சந்நிதியில் காணிக்கை செலுத்தும்படிக்கும், அவருக்கு ஊழியம் செய்யும்படிக்கும், அவருடைய நாமத்தினால் என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கும்படிக்கும், ஆரோனும் அவன் குமாரரும் என்றென்றைக்கும் பிரித்து வைக்கப்பட்டார்கள். 14எங்கள் பிதாவின் மனுஷனாகிய மோசேயைப் பொறுத்தமட்டில், அவனுடைய குமாரர் லேவியின் கோத்திரத்தில் எண்ணப்பட்டார்கள். 15மோசேயின் குமாரர்: கெர்சோமும் எலியேசரும். 16கெர்சோமின் குமாரர்: தலைவனாகிய செபுவேல். 17எலியேசரின் குமாரர்: தலைவனாகிய ரெகபியா. எலியேசருக்கு வேறு குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரரோ மிகவும் அநேகமாயிருந்தார்கள். 18இத்சாரின் குமாரர்: தலைவனாகிய செலோமித். 19எப்ரோனின் குமாரர்: தலைவனாகிய யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யகசியேல், நான்காவது யெகாமெயாம். 20ஊசியேலின் குமாரர்: தலைவனாகிய மீகாவும், இரண்டாவது இஷ்ஷியாவும்.
மெராரியின் வம்சங்கள்
21மெராரியின் குமாரர்: மகேலியும் மூஷியும். மகேலியின் குமாரர்: எலெயாசாரும் கீசும். 22எலெயாசார் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் உள்ளவனாய் மரித்தான்; ஆகையால் அவர்களுடைய உறவினராகிய கீசின் குமாரர் அவர்களை விவாகம்பண்ணினார்கள். 23மூஷியின் குமாரர்: மகேலி, ஏதேர், யெரெமோத் ஆகிய மூன்று பேர்.
24இவர்களே தங்கள் வம்சத்தின்படி லேவியின் குமாரர்; இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ளவர்களாய், எங்கள் பிதாவின் ஆலயத்தில் ஊழியம் செய்த, பேர்பேராய்ப் பதிவுசெய்யப்பட்ட வம்சத் தலைவர்கள் இவர்களே. 25தாவீது சொன்னது: “இஸ்ரவேலின் தேவனாகிய எங்கள் பிதா தம்முடைய ஜனத்திற்கு இளைப்பாறுதலைத் தந்து, எருசலேமில் என்றென்றைக்கும் வாசம்பண்ணுகிறார். 26ஆகையால் லேவியர் இனிமேல் ஆசரிப்புக்கூடாரத்தையும் அதின் ஊழியத்திற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும் சுமக்கவேண்டியதில்லை.” 27தாவீதின் இந்த இறுதி கட்டளைகளின்படி, இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள லேவியர் எண்ணப்பட்டார்கள். 28எங்கள் பிதாவின் ஆலயத்தின் ஊழியத்தில் ஆரோனின் குமாரருக்கு உதவிசெய்வதும், முற்றங்களையும் அறைகளையும் பராமரிப்பதும், பரிசுத்தமான எல்லாப் பொருட்களையும் சுத்திகரிப்பதும், எங்கள் பிதாவின் ஆலயத்தின் ஏதாவது வேலையைச் செய்வதும் அவர்களுடைய கடமையாயிருந்தது. 29சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கான மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அப்பங்களையும், சுடுதலையும், பிசைதலையும், அளவு நிறை எண்ணிக்கை அனைத்தையும் அவர்கள் பராமரித்தார்கள். 30அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்பண்ணித் துதிசெய்யவும், அந்தப்படியே மாலையிலும் நிற்கவேண்டியதாயிருந்தது; 31ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், குறிக்கப்பட்ட பண்டிகைகளிலும், எங்கள் பிதாவுக்கு செலுத்தப்படும் எல்லாச் சர்வாங்க தகனபலிகளுக்காகவும், கட்டளையிடப்பட்ட எண்ணிக்கையின்படி, எப்பொழுதும் எங்கள் பிதாவின் சந்நிதியில் நிற்கவேண்டியதாயிருந்தது. a a v31 மாதப்பிறப்புகள் ஒவ்வொரு புதிய எபிரெய மாதத்தின் தொடக்கத்தில் மாதந்தோறும் கொண்டாடப்பட்ட கொண்டாட்டங்களாகும். 32எங்கள் பிதாவின் ஆலயத்தின் ஊழியத்தில், ஆசரிப்புக்கூடாரத்தின் காவலையும், பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், தங்கள் சகோதரராகிய ஆரோனின் குமாரரின் காவலையும் அவர்கள் காத்துக்கொண்டார்கள்.